ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது.
ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. ஆனால், பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை ஏவுகணை பாதுகாப்பு கவச வாகனம் மூலம் இந்தியா முறியடித்தது.

இதனால் இரு நாடுகளிடையே தீவிர போர் மூளுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 10ம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.அவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் இருதரப்பு சண்டை நிறுத்தத்தை இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியும் உறுதி செய்தார். அன்று மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமலானது.
இதையும் படிங்க: திரும்ப திரும்ப பொய் பேசுறீங்க! சசிதரூருக்கு புரிஞ்சது கூட ராகுல்காந்திக்கு புரியல! வெளுத்து வாங்கும் வானதி..!
முன்னதாக பாகிஸ்தானின் விமான ஏவு தளங்களை இந்தியா அடித்து நொறுக்கியது. அதிலிருந்து மீண்டு வரவே பாகிஸ்தானுக்கு பல மாதங்கள் ஆகும். நமக்கு லேசான சேதம் மட்டுமே ஏற்பட்டது. ஆனால், நமது விமானங்களை சுட்டு விழ்த்தியதாக பாகிஸ்தான் கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டது. இந்த வதந்திகளை மறுத்த இந்திய ராணுவம், ஆதாரங்களையும் காட்டியது.

ஆனால், காங்கிரஸ் லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நாம் எத்தனை போர் விமானங்களை இழந்தோம் சொல்லுங்கள் என்று திரும்ப, திரும்ப கேட்டு வருகிறார்.
இந்திய ராணுவ நடவடிக்கை பற்றி முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொல்லிவிட்டதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டி வருகிறார். அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தலையிட்டதால் சண்டை நிறுத்தம் வந்ததாகவும் இதில் மூன்றாம் நபர் தலையீட்டை எப்படி அனுமதிக்கலாம் எனவும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி வருகிறார்.

பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதன் பேரில் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. ஆனால், வர்த்தக உறவை காரணம் காட்டி போரை நிறுத்தியதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறினார். அவரது இந்த கூற்றை, இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. டிரம்ப்பிடம் பிரதமர் மோடி சரண்டர் ஆகிவிட்டதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விமர்சனம் செய்து வந்தார். முன்னாள் பிரதமர் இந்திரா மட்டும் இருந்திருந்தால், பாகிஸ்தானை இரண்டாக்க பிளவுபடுத்தி இருப்பார் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்து அமெரிக்காவில் விளக்கம் அளிக்க சென்றுள்ள மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி., சசி தரூர், ராகுல் காந்தியின் விமர்சனத்தை நிராகரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது; போரை நிறுத்துமாறு இந்தியாவை நிறுத்த யாரும் வற்புறுத்த வேண்டியதில்லை. நாங்களே பாகிஸ்தானிடம் கூறினோம். பாகிஸ்தான் போரை நிறுத்தினால், நாங்களும் நிறுத்தத் தயாராக இருப்பதாக நாங்களே கூறினோம். பாகிஸ்தான் அதை ஏற்றுக் கொண்டதன் பேரில் போர் நிறுத்தப்பட்டது.
இனி பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால், இந்தியா படைகளை பயன்படுத்த தயாராக உள்ளது. பயங்கரவாதம் எனும் மொழியில் பாகிஸ்தான் பேசும் வரையில், நாம் ராணுவத்தின் மொழியில் பதிலடி கொடுப்போம். இதற்கு 3ம் தரப்பு தலையீடு தேவையில்லை. அமெரிக்காவுடன் நமக்கு மிக முக்கியமான உறவு உள்ளது, எனக் கூறினார். சசி தரூரின் இந்தப் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்த மத்திய குழுவின் மற்றொரு பிரதிநிதியான மிலிந்த் தியோரா, 'அவர் எப்போதும் கட்சிக்கு முன்பாக நாட்டை பற்றியே சிந்திக்கிறார்,' என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு அவங்க மொழியிலேயே பதிலடி கொடுத்தோம்! அமெரிக்காவில் சசிதரூர் கெத்து ரிப்ளை!