கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், இடதுசாரி இயக்கத்தின் மூத்த அரசியல்வாதியான அச்சுதானந்தனுக்கு தற்போது வயது 101. வயோதிகம் காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்து வருகிறார். ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த இவர் 2006 முதல் 2011 வரை கேரள முதலமைச்சராக செயல்பட்டுள்ளார். மேலும் 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPI(M)) உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவர், அவர் இப்போது இக்கட்சியின் உயிருள்ள மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ளார்.

7 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அச்சுதானந்தன், 10 தேர்தல்களில் போட்டியிட்டு 3-ல் மட்டுமே தோல்வியடைந்தார். 2016-ல் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார், ஆனால் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!
இதனிடையே, திருவனந்தபுரத்தில் வீட்டில் இருந்த அச்சுதானந்தனுக்கு கடந்த 23ம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அச்சுதானந்தன் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் இதை தம்மிடம் கூறியதாகவும் அவரது மகன் வி.எஸ். அருண்குமார் அண்மையில் தெரிவித்து இருந்தார். இருதயநோய், நரம்பியல் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழு அவரை கண்காணித்து வருகிறது. மேலும் அவர் வென்டிலேட்டர் உதவியுடன் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அச்சுதானந்தனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர் குழுவின் கண்காணிப்பில் தொடந்து இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அச்சுதானந்தனை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், அவர் அச்சுதானந்தனின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார். அவரை தொடர்ந்து CPI(M) மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று அவரைப் பார்வையிட்டனர்.

அச்சுதானந்தனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் காணப்படாததால் இடதுசாரி இயக்கத்தினர், மற்ற அரசியல்கட்சிகள் தலைவர்கள், தொண்டர்கள் கவலையில் உள்ளனர்.
இதையும் படிங்க: நடுத்தர மக்களைப் பத்தி சிந்திச்சீங்களா? - மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை வைத்த கோரிக்கை..!