தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், திமுகவுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான பேச்சுகள் மூன்று கட்டங்களாக நடைபெற்ற பின்னரும் இன்னும் இறுதி முடிவுக்கு வராமல் இழுபறி நீடித்து வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி ஒதுக்கீடு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய இடதுசாரி கூட்டாளியாக உள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களை வென்றிருந்தது.
ஆனால் இம்முறை திமுக சிபிஎம்முக்கு 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சிபிஎம் கட்சி கடந்த முறையைவிட கூடுதல் தொகுதிகளை கோரி உறுதியாக நிலைப்பாடு எடுத்துள்ளது. மாநிலச் செயலாளர் பி. சண்முகம் தலைமையிலான குழு, "கூடுதல் தொகுதிகள் கேட்பதில் எந்த நியாயமும் இல்லை என்று திமுக கூறுவது ஏற்கத்தக்கதல்ல" என விமர்சித்து வருகிறது. காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், தேமுதிகவுக்கு 4, பிற சிறிய கட்சிகளுக்கு பல தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சிபிஎம்முக்கு குறைவான இடங்கள் வழங்குவது நியாயமற்றது என்ற வாதத்தை அக்கட்சி முன்வைத்து வருகிறது.

மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றன. முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் ஆரம்ப விவாதங்கள் நடந்த நிலையில், மூன்றாம் கட்ட பேச்சு சமீபத்தில் நடைபெற்றது. ஆனால் சிபிஎம் தனது கோரிக்கையில் இருந்து இறங்கவில்லை. திமுக தரப்பில் கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை பகிர்ந்து அளிப்பதில் சிரமம் இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பேச்சுவார்த்தை முடிவடையாமல் தொடர்ந்து இழுபறியாக உள்ளது.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... தொகுதி பங்கீடு தீவிரம்... திமுக - சிபிஎம் பேச்சுவார்த்தை..!!
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ ) உடனான பேச்சுகள் முடிவடைந்து, அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்பாடு கையெழுத்தானது. ஆனால் சிபிஎம் விஷயத்தில் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், தொகுதி பங்கீடு இழுபறி குறித்து ஆலோசிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாநிலக்குழு அவசர கூட்டம் இன்று நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், M.A. பேபி உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
இதையும் படிங்க: ஈரான் மீதான தாக்குதல்... உடனடியா நிறுத்தணும்... CPM கடும் கண்டனம்..!!