காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் இருநாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவியது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன.

இதற்கிடையே நம் நாட்டில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு உளவுப்பார்த்த நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு வைத்து நம் நாடு பற்றிய ரகசியங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியவர்களை தேடி தேடி போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் யுடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உள்பட 10க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் தற்போது ராஜஸ்தானின் காங்கிரஸ் மாஜி அமைச்சர் ஷாலே முகமதுவின் முன்னாள் உதவியாளர் ஷாகுர் கானை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: சிந்து நீர் ஒப்பந்தம் ரத்தின் தாக்கம் அடுத்த சில நாட்களில் தெரியும்... உண்மையை உடைத்த ஜெய்சங்கர்!!

அதோடு காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஷாலே முகமதுவும், ஷாகுர் கானும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள். இதனால் தான் ஷாலே முகமது, அவரை உதவியாளராக சேர்த்ததும் தெரியவந்துள்ளது. ஷாகுர் கான் பாகிஸ்தானுக்கு அடிக்கடி சென்று வந்ததோடு, பாகிஸ்தானை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் சிஐடி மற்றும் உளவுத்துறையின் சிறப்பு பிரிவை சேர்ந்தவர்கள் இணைந்து அவரை கைது செய்துள்ளனர். சாகுர் கானிடம் தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஷாகுர் கான் மங்கலியா என்பவர் காங்கிரஸ் மாஜி அமைச்சரிடம் உதவியாளராகவும் பணியாற்றி உள்ளார். இவர் ஜெய்சல்மார் மாவட்டத்தை சேர்ந்தவர்.

தற்போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றியதும் தெரியவந்துள்ளது. இவர் மீது உளவுத்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரை கண்காணித்து வந்தது. அப்போது அவர் பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ளவர்கள் மூலமாக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது செல்போனில் இருந்து பாகிஸ்தானின் செல்போன் எண்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 2வது முறையாக நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார் ராகுல்காந்தி... காரணம் இதுதான்!!