ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாக, ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முதன்முறையாக இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளனர். இந்த அதிரடித் தாக்குதல் மேற்காசியப் பகுதியில் நான்கு வாரங்களாக நீடித்து வரும் மோதலை மேலும் பெரிய அளவில் விரிவடையச் செய்யும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
சனாவில் இருந்து ஹவுதி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் யாஹியா சரீ வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேல் மேற்காசியாவில் பிராந்திய விரிவாக்கத்துக்காக செயல்பட்டு வருகிறது. ‘கிரேட்டர் இஸ்ரேல்’ என்ற பெரிய இலக்குடன் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் உடனடியாக பேச்சுவார்த்தை மூலம் இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது: “நியாயமற்ற, ஒடுக்குமுறை மற்றும் நியாயப்படுத்த முடியாத செயல்கள் உலக ஸ்திரத்தன்மைக்கும், பிராந்திய பாதுகாப்புக்கும், உலகப் பொருளாதாரத்துக்கும் பெரும் தீங்கு விளைவிக்கின்றன.
இதையும் படிங்க: இஸ்ரேல் மீது ஏவுகணை மழை! ட்ரம்பை கேலி செய்யும் ஈரான்! அப்போ பேச்சுவார்த்தை சும்மாதானா?
இந்த மோதலை எதிர்கொள்ள முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து நின்று, தாக்குதல் நடத்துபவர்களுக்கு பெரிய தோல்வியை ஏற்படுத்த வேண்டும். ராணுவ ரீதியான தலையீட்டுக்கு ஹவுதி அமைப்பு முழுமையாக தயாராக உள்ளது” என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த எச்சரிக்கைக்குப் பின்னர், ஏமனில் இருந்து இஸ்ரேல் நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்று ஏவப்பட்டது. இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளனர். இது ஹவுதி அமைப்பு இஸ்ரேல் மீது நேரடியாக நடத்திய முதல் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய மோதலில் ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும், பாலத்தீனத்தின் ஹமாஸ் அமைப்பும் ஏற்கெனவே தாக்குதல்களை தொடுத்து வருகின்றன. இதனால் இஸ்ரேல் லெபனானையும் தாக்கியுள்ளது. இப்போது ஹவுதியும் போரில் நேரடியாக இணைந்துள்ளதால், மோதல் ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா, லெபனான், ஏமன் உள்ளிட்ட பல நாடுகளை உள்ளடக்கிய பெரும் பிராந்தியப் போராக மாறும் அபாயம் அதிகரித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள இடையூறு உலக எண்ணெய் விலையை ஏற்கெனவே பாதித்து வரும் நிலையில், ஹவுதியின் புதிய தாக்குதல் உலகப் பொருளாதாரத்துக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என பயப்படுகின்றனர். ஹவுதி அமைப்பு ஏற்கெனவே செங்கடல் பகுதியில் சர்வதேச வணிகக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போது இஸ்ரேல் மீது நேரடி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் உரிய பதிலடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்காசியப் பகுதியில் அமைதி திரும்ப வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. போர் மேலும் விரிவடைந்தால் அதன் பாதிப்பு உலகம் முழுவதும் உணரப்படும் என பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: மேற்காசிய போர் பதற்றம்! மோடி - ட்ரம்ப் ஆலோசனை!! அமெரிக்க, இஸ்ரேல் - ஈரான் போருக்கு பின் முதல்முறை!