புதுடில்லி: பனிப்பாறை உடைப்பு காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை அனுப்பி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 5.5 டன் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சிறப்பு மீட்பு உபகரணங்களுடன் 11 பேர் கொண்ட மீட்புக் குழுவை ஏற்றிக்கொண்டு இந்தியாவின் 5வது விமானம் இன்று (செப்., 2) நேபாளத்துக்கு புறப்பட்டுச் சென்றது.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடரில் இதுவரை 1,050 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன.
இந்தியாவின் 5வது விமானம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள தகவலில், சிறப்பு உபகரணங்களுடன் கூடிய 11 பேர் கொண்ட மீட்புக் குழுவும், 5.5 டன் அத்தியாவசிய மருந்துகளும் நேபாளத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது! 275 இந்தியர்கள் உள்பட 3,916 பேர் மாயம்! 7-வது நாளாக தேடுதல் வேட்டை!

இதற்கு முன்னதாக, ஆகஸ்ட் 26-ம் தேதி இந்திய விமானப்படையின் சி-130ஜே ஹெர்குலஸ் விமானம் மூலம் 10 டன் நிவாரணப் பொருட்கள் நேபாளத்துக்கு அனுப்பப்பட்டன. அடுத்த நாளான ஆகஸ்ட் 27-ம் தேதி சி-17 குளோப்மாஸ்டர் விமானம் மூலம் 37.5 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன. இதில் உணவுப் பொருட்களும் இடம்பெற்றிருந்தன.
ஆகஸ்ட் 28-ம் தேதி சென்ற 3வது விமானத்தில் சுரங்க மீட்புப் பணியில் அனுபவம் கொண்ட இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர், 6 பேர் கொண்ட மருத்துவக் குழு மற்றும் ஜெனரேட்டர்கள், உணவு, தண்ணீர் சுத்திகரிப்பு மாத்திரைகள், மருந்துகள் உள்ளிட்ட 10 டன் பொருட்கள் அனுப்பப்பட்டன.
ஆகஸ்ட் 30-ம் தேதி சென்ற 4வது விமானத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான சுரங்க தொழில்நுட்பக் கருவிகள், டிஎன்ஏ மற்றும் தடயவியல் நிபுணர்கள், போர்வைகள், தார்ப்பாய்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்பட்டன.
தற்போது 5வது விமானமும் புறப்பட்டுள்ள நிலையில், நேபாளத்தில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இந்தியாவின் உதவி தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதையும் படிங்க: 5-வது நாளாக தொடரும் மீட்புப் பணி! மீண்டும் வெள்ள அபாயம்! 3,000-க்கும் மேற்பட்டோர் மாயம்; இந்தியர்களின் நிலை?