இந்தியாவின் சூழலியல் பாரம்பரியத்தின் இன்றியமையாத அங்கமாகத் திகழும் கம்பீரமான யானைகளைப் பாதுகாப்பதிலும், பராமரிப்பதிலும் பங்காற்றும் வனத்துறைப் பணியாளர்கள், விஞ்ஞானிகள், கால்நடை மருத்துவர்கள், பாகன்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்குத் தனது பாராட்டுதலையும் பெருமிதத்தையும் தெரிவித்துக் கொள்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்று (12.08.2026) உலக யானைகள் தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, யானைகள் பாதுகாப்பு குறித்துப் பல முக்கிய விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.

உலக யானைகள் தினத்தில், நாட்டின் சூழலியல் பாரம்பரியத்தின் பிரிக்க முடியாத அங்கமாக விளங்கும் கம்பீரமான யானைகளைப் போற்றி மகிழ்கிறோம். உலகில் உள்ள மொத்தக் காட்டு ஆசிய யானைகளின் எண்ணிக்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான யானைகளுக்கு இந்தியாவே தாயகமாகத் திகழ்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இதையும் படிங்க: ரீல்ஸ் உலகம் உங்களை ஏமாற்றிவிடும்! இளைஞர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த ஸ்ட்ராங் அட்வைஸ்!
நம் நாட்டில் உள்ள 33 யானைகள் காப்பகங்கள் (Elephant Reserves), யானைகளுக்கான இயற்கையான வாழ்விடங்களை வழங்குவதுடன், அவற்றின் நீண்டகாலப் பாதுகாப்பிற்கான நமது முயற்சிகளையும் வலுப்படுத்துகின்றன.
யானைகளைப் பாதுகாக்கும் இந்தப் புனிதம் நிறைந்த பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள வனத்துறைப் பணியாளர்கள், விஞ்ஞானிகள், கால்நடை மருத்துவர்கள், பாகன்கள் மற்றும் உள்ளூர் மக்களின் பங்களிப்பைக் கண்டு நாடு பெருமிதம் கொள்கிறது.
யானைகள் காப்பகம் மற்றும் மனித-யானை மோதல்களைக் குறைப்பதில் இந்தியா தொடர்ந்து வெற்றிநடை போட்டு வரும் சூழலில், உலக யானைகள் நாளில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இந்த வாழ்த்துப் பதிவு இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அவைக்கு வர மோடியும் அமித்ஷாவும் பயப்படுகிறார்கள்! மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு!