மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க மத்தியஅரசு இன்று அதிரடியான அவசரகால உத்தரவை (Emergency Order) பிறப்பித்துள்ளது. இதன்படி, உள்நாட்டுச் சமையல் எரிவாயுத் தேவையைப் பூர்த்தி செய்ய அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் தங்களது உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், சமையல் எரிவாயு தயாரிப்பிற்குத் தேவையான புரோப்பேன் (Propane) மற்றும் பியூட்டேன் (Butane) வாயுக்களைப் பயன்படுத்தி LPG உற்பத்தியை அதிகபட்ச நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
பெட்ரோகெமிக்கல் (Petrochemical) பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்குப் புரோப்பேன் மற்றும் பியூட்டேன் வாயுக்களை வழங்குவதற்கு மத்திய அரசு தற்போது தடை விதித்துள்ளது. இந்த வாயுக்கள் அனைத்தும் முழுமையாகச் சமையல் எரிவாயு உற்பத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டும் எனத் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்! $150-ஐத் தொடும் என கத்தார் எச்சரிக்கை!

உற்பத்தியாகும் அனைத்து LPG எரிவாயுவும் இந்தியன் ஆயில் (IOCL), பாரத் பெட்ரோலியம் (BPCL) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். அவர்கள் இதனைச் சமையல் தேவைக்காக மட்டுமே பொதுமக்களுக்கு விநியோகிப்பார்கள்.
இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955 (Essential Commodities Act)-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி எச்சரித்துள்ளார்.
இந்தியாவின் சமையல் எரிவாயு தேவையில் சுமார் 85% முதல் 90% வரை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே (குறிப்பாக சவுதி அரேபியா, கத்தார்) இறக்குமதி செய்யப்படுகிறது. ஹார்முஸ் நீரிணையில் நிலவும் போர் பதற்றத்தால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டு விநியோகத்தைச் சீராக வைத்திருக்க இந்த அதிரடி முடிவை அரசு எடுத்துள்ளது.
இதையும் படிங்க: 5 நாட்களுக்குப் பின் அலி கமேனிக்கு இந்தியா இரங்கல்! ஈரான் தூதரகத்தில் விக்ரம் மிஸ்ரி அஞ்சலி!