அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரின் வெஸ்ட் சிக்ஸ்த் ஸ்ட்ரீட் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) அதிகாலை கொடூர துப்பாக்கிச் சூடு நடந்தது. திறந்தவெளியில் கூடியிருந்த இளைஞர்கள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 21 வயது மாணவி சவிதா சன்முகசுந்தரமும் (Savitha Sanmugasundaram) கொல்லப்பட்டுள்ளார். டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து வந்த சவிதா ஆஸ்டின் பகுதியைச் சேர்ந்தவர். இந்த சம்பவம் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
மற்ற கொல்லப்பட்டவர்களில் ரைடர் ஹாரிங்டன் (19) என்பவரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள இருவரின் பெயர்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 53 வயதான நிடியாகா டியாக்னே (Ndiaga Diagne) என்பவர் செனீகல் நாட்டைச் சேர்ந்தவர். அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.
இதையும் படிங்க: லெபானானுக்கு குறி வைக்கும் இஸ்ரேல்! கூடுதல் இடங்களை கைப்பற்ற நெதன்யாகு ஆர்டர்!!

போலீஸ் அதிகாரிகள் அவரை சுட்டுக் கொன்றனர். சம்பவ இடத்திலும் அவரது வீட்டிலும் சோதனை நடத்திய போது ஈரான் நாட்டின் கொடி, தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய எழுத்துக்கள், ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனால் அதிகாரிகள் இத்தாக்குதலை ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலாக சந்தேகிக்கின்றனர். தற்போது மத்திய கிழக்கில் நடக்கும் போர் பதற்றத்துடன் இணைந்து இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதால் ஈரான் ஆதரவு குழுக்கள் உலகெங்கும் பதிலடி தாக்குதல்களை திட்டமிடுவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்து வருகிறது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் சவிதாவின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் அவரது உடலை நாடு திரும்ப கொண்டு வர ஏற்பாடு செய்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இத்தாக்குதலை கண்டித்து, “பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் நாங்கள் விடாப்பிடியாக இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்டின் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உலக அளவில் பயங்கரவாத அச்சுறுத்தலை மீண்டும் நினைவூட்டியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமித் ஷாவுடன் 'மெகா' டீல்... டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் எடப்பாடி பழனிசாமி!