மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான ராணுவ மோதல் தீவிரமடைந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது பெரும் வான்வழித் தாக்குதல் தொடங்கின.
இதில் ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஈரான், மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இத்தாக்குதல்களால் லெபனான், யேமன், ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ராணுவம் இன்று (மார்ச் 3) வெளியிட்ட அறிக்கையின்படி, ஈரான் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க வீரர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: இந்த 14 நாட்டை விட்டு உடனே வெளியேறுங்க! அமெரிக்கா ஆர்டர்! ஐக்கிய அரபு அமீரகம், சவுதி, கத்தார் என நீளும் லிஸ்ட்!
முதலில் 4 பேராக இருந்த பலி எண்ணிக்கை, பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இருவர் உடல்கள் மீட்கப்பட்டதால் 6 ஆக அதிகரித்துள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தரப்பில் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலில் ஈரான் தாக்குதலால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பிராந்தியம் முழுவதும் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது.

பல நாடுகள் வான்வெளியை மூடியுள்ளன. துபாய், அபுதாபி, தோஹா, ரியாத் உள்ளிட்ட விமான நிலையங்களில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பயணிகள், இந்தியர்கள் உட்பட, விமான நிலையங்கள் மற்றும் ஹோட்டல்களில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்த போர் எண்ணெய் விலை உயர்வு, உலக பொருளாதார பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டும் அபாயம் உள்ளது. அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஈரான் ஆதரவு குழுக்களான ஹிஸ்புல்லா, ஹவுதிகள் ஆகியவை இஸ்ரேல், அமெரிக்க தளங்களை குறிவைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்திய அரசு தனது குடிமக்களை எச்சரித்து, மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. உலக நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில், போர் மேலும் விரிவடையும் அச்சம் நீடிக்கிறது. மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மோதல் உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: ஒரு நாளைக்கு மட்டும் ரூ.7000 கோடி செலவு!! ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் போர்! அதிகரிக்கும் செலவீனம்!