பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பில் கொண்டுவர வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஷஃப்கத் அலி கான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்தக் கருத்து பொறுப்பற்றது. இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான பாகிஸ்தானின் பாரம்பரிய பாதுகாப்பு வழிமுறைகள் மீது இந்தியாவுக்கு உள்ள ஆழ்ந்த விரக்தியையே இது வெளிப்படுத்துகிறது. ‘அணுசக்தி அச்சுறுத்தல்’ இருப்பதாக இந்தியா கூறுவது, அது தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்ளும் துயரம். இந்திய பாதுகாப்பு அமைச்சரின் கருத்துகள், சர்வதேச அணுசக்தி முகமை போன்ற ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிறுவனத்தின் ஆணை மற்றும் பொறுப்புகள் குறித்த அவரது அறியாமையையே காட்டுகிறது.
இதையும் படிங்க: இந்தியா மீதான வன்மத்தை கக்கிய டிரம்ப்.. ஆப்பிள் நிறுவன தலைவருக்கு பறந்த வார்னிங்!!

இந்தியாவில் அணு மற்றும் கதிரியக்கப் பொருட்கள் திருடப்படுகின்றன அல்லது சட்டவிரோதமாக கடத்தத்தப்படுகின்றன. இது குறித்து சர்வதேச அணுசக்தி முகமை மற்றும் சர்வதேச சமூகம் கவலைப்பட வேண்டும். அணுசக்தி மற்றும் பிற கதிரியக்கப் பொருட்களின் பாதுகாப்புக்காக இந்தியா எடுத்த நடவடிக்கைகள் என்ன?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக ஸ்ரீநகரில் ராஜ்நாத் சிங், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “எல்லையில் இருந்த பாகிஸ்தானிய பயங்கரவாத முகாம்கள் மற்றும் பதுங்கு குழிகளை நீங்கள் அழித்த விதத்தை, எதிரிகளால் ஒருபோதும் மறக்க முடியாது என்று நினைக்கிறேன்.
இவ்வளவு பொறுப்பற்ற மற்றும் முரட்டுத்தனமான நாட்டின் கைகளில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்குமா என்று நான் முழு உலகத்தையும் கேட்கிறேன். பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்” என்று ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: இந்தியா பக்கம் சாய்ந்த இஸ்ரேல்... வெற்றிக்கு பாரட்டியதோடு துணை நிற்போம் என உறுதி!!