தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என நடிகர் கமல்ஹாசன் தக் லைப் ப்ரோமோஷன் விழாவில் பேசியது சர்ச்சையை கிளப்பியது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கும் வரை படம் கர்நாடகத்தில் வெளியாகாது என அம்மாநில அமைப்புகள் தெரிவித்தன. கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், பிரச்சனை இன்றி படம் வெளியாக வேண்டும் என வலியுறுத்தி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, எந்த மொழியும் இன்னொரு மொழியில் இருந்து பிறக்க முடியாது என்றும் அதற்கான ஆதாரம் எங்கே எனவும் கேள்வி எழுப்பினார். கன்னட மக்களின் உணர்வுகளை குறைத்து மதிப்பிடுகிறீர்களா என கேள்வி எழுப்பிய நீதிபதி, மன்னிப்பு கேட்பதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்றும் இப்படி ஒரு சூழலை ஏற்படுத்திவிட்டு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: கமல் கருத்தை தப்பா புரிஞ்சுகிட்டாங்க..! கர்நாடக ஐகோர்ட்டை நாடிய THUG LIFE படக்குழு..!

கமல்ஹாசன் கேட்கும் ஒரு சிறு மன்னிப்பு மொத்த பிரச்சனையும் சரி செய்துவிடும் என்ன கருத்து தெரிவித்த அவர், கமல் என்ன தொல்லியல் ஆய்வாளரா இல்லை மொழியியல் வல்லுநரா என சரமாரியாக கேள்வி எழுப்பினார். தக் லைஃப் திரைப்படம் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்க நினைக்கும் கமல் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்றும் பேசுவதற்கு உரிமை உண்டு, ஆனால் காயப்படுத்துவதற்கு உரிமை இல்லை எனவும் கன்னட மக்கள் தரும் கோடிக்கணக்கான பணம் வேண்டும், அதை பார்க்கும் மக்கள் வேண்டாமா எனவும் சரமாரியாக கருத்து தெரிவித்தார்.

உணர்வுகளை காயப்படுத்த எந்த குடிமகனுக்கும் உரிமை இல்லை எனவும் நீதிபதி நாக பிரசன்னா காட்டமாக பேசினார். இந்த நிலையில், கமல் வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என் மேல தப்புனா நான் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன்.. கமல்ஹாசன் திட்டவட்டம்..!