மக்கள் அதிகம் பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் மருந்துகளின் மாதிரிகளைப் பெற்று, கடந்த மே மாதத்தில் தர ஆய்வை கர்நாடக சுகாதாரத்துறை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் மக்கள் அன்றாட வாழ்க்கையில் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய பாராசிட்டமால் 650 வகை, பான் டி வகை உள்ளிட்ட மாத்திரைகள் தரம் குறைவாக தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, 15 நிறுவனங்கள் தயாரிக்கும் 15 வெவ்வேறு மாத்திரைகளுக்கு தடை விதிப்பதாக கர்நாடக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

15 வகையான மருந்துகள் மற்றும் மாத்திரைகளுக்கு தடை விதித்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாராசிட்டமால் 650, MITQ Q7 சிரப், PANTOCOAT-DAR உள்ளிட்ட மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் B6 & வைட்டமின் D3 மாத்திரைகளும் தடை செய்யப்பட்டுள்ளது. சோடியம் குளோரைடு ஊசி IP 0.9% w/v, இரும்பு சுக்ரோஸ் ஊசி USP 100ML, கலவை சோடியம் லாக்டேட் ஊசி I.P. RL -க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சோகத்தை ஏற்படுத்திய பெங்களூரு உயிரிழப்பு சம்பவம்..! RCB நிர்வாகி உட்பட 3 பேர் கைது..!

பொதுமக்களின் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளுக்கு இடையே தயாரிக்கப்பட்டிருக்கும் மாத்திரைகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவர்கள், மருந்து விற்பனையாளர்கள், மருந்தக உரிமையாளர்கள் அனைவரும் உடனடியாக தடை செய்யப்பட்ட இந்த 15 வகை மருந்துகளின் விற்பனையை நிறுத்த வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட மருந்துகள் இருப்பு வைத்துள்ள மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்கள் உடனடியாக உள்ளூர் மருந்து ஆய்வாளர் அல்லது உதவி மருந்து கட்டுப்பாட்டாளருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறி மருந்துகள் விற்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் வீடு வசதி திட்டம்; மாப்பிள்ளை அவருதான் ஆனா சட்டை என்னோடது... பங்கமாக கலாய்த்த ஸ்டாலின்!!