அமெரிக்கா - ஈரான் போர் காரணமாகச் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் வணிகப் பயன்பாட்டு (Commercial LPG) சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், நிலைமையைச் சமாளிக்கத் தமிழக அரசு நாளை (புதன்கிழமை) அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் தலைமையில் நாளை நடைபெறும் இக்கூட்டத்தில், தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உத்தரவின்படி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதால், வணிகச் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பல ஹோட்டல்கள் மெனுவைக் குறைத்துள்ளன; சில உணவகங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தேர்தலில் போட்டியிடாத கட்சிகளுக்கு எதற்கு முன்னுரிமை? தவெக மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்றம் கேள்வி!

சிலிண்டர்களுக்கு மாற்றாக மின்சார அடுப்புகள் (Electric Induction Stoves) மற்றும் இயற்கை எரிவாயு (PNG) குழாய் இணைப்புகளைப் பயன்படுத்துவது குறித்து நாளை விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக, ஹோட்டல்களுக்குத் தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தை தடையின்றி வழங்குவது குறித்து மின்சார வாரிய அதிகாரிகளுடனும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.
முன்னதாக இன்று (மார்ச் 10), முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், எரிவாயு தட்டுப்பாட்டால் உணவகங்கள் மற்றும் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நேற்று (மார்ச் 9) முதல் வணிகச் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான ஹோட்டல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைத் தீர்மானிப்பதாக அமையும்.
இதையும் படிங்க: தோழர் நல்லகண்ணுவுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை... முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!