மைத்ரேயன் தனது அரசியல் பயணத்தை 1991ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் தொடங்கினார். பாஜகவில் இணைந்த அவர், மாநில செயற்குழு உறுப்பினராகவும், மாநில அறிஞர் அணி தலைவராகவும், பொதுச் செயலாளராகவும், துணைத் தலைவராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
1999ஆம் ஆண்டு வரை பாஜகவில் இருந்த அவர், பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
2002ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி மோதல்கள் தோன்றின.
இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கை பற்றி கேட்டால் மட்டும் பம்முராரு... முதல்வரை விளாசிய இபிஎஸ்..!
இதில் மைத்ரேயன் ஆரம்பத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் அணியில் இணைந்தார். பின்னர், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அணிக்கு மாறினார்.
ஆனால், 2022ஆம் ஆண்டு ஓபிஎஸ்-ஐ மீண்டும் சந்தித்ததற்காக எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, மைத்ரேயன் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் டெல்லியில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.
அவருக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இருப்பினும், பாஜகவில் அவருக்கு எதிர்பார்த்த பொறுப்புகளோ, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்போ வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த மைத்ரேயன், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி சென்னையில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில் மைத்ரேயன் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து மைத்ரேயன் திமுகவில் இணைந்தார். எதற்காக திமுகவில் இணைந்தேன் என மைத்ரேயன் பேட்டியளித்தார்.
அப்போது, அதிமுகவின் போக்கு சரியாக இல்லை என கூறினார். கூட்டணியை அறிவித்ததே அமித்ஷா தான் என்றும் அதிமுக - பாஜக கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லை எனவும் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று நினைத்துக் கொள்கிறார் என்று விமர்சித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவிய முக்கிய புள்ளி..! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்..!