புனேயில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார் மகாராஷ்ட்ர மாநிலத்தைச் சேர்ந்த ஷர்மிஸ்தா பனோலி என்ற இளம்பெண். ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவாக காரசாரமாக ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் போட்டார். அந்த வீடியோவில், இஸ்லாம் மதத்தைப் பற்றி அவதூறான கருத்துக்களை அவர் கூறியிருந்தார். ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாலிவுட் முன்னணி நடிகர்கள் வாய் திறக்காதது ஏன்? எனவும் காரசாரமாக வீடியோவில் பேசியிருந்தார், ஷர்மிஸ்தா. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஷர்மிஸ்தா எதிர்பார்த்ததைவிட, பல மாநிலங்களில் இருந்தும் கண்டனக்கணைகள் பறந்து வந்தன.

கொல்கத்தா போலீசில் அவர் மீது புகார் செய்யப்பட்டது. மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, கொல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சம்மனும் அனுப்பினர். விசாரணைக்கு ஆஜராகாத ஷர்மிஸ்தா,புனேயை விட்டு தப்பி ஓடி தலைமறைவானார். உடனடியாக தான் போட்ட சர்ச்சை வீடியோவை நீக்கினார். தன்னுடைய கருத்துகளுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இதையும் படிங்க: 5 மடங்காகும் ராணுவம் பட்ஜெட்.. உலக அரங்கில் மாஸ் காட்டப்போகும் இந்திய ராணுவம்..!

என் தனிப்பட்ட உணர்வுகளை வெளியிட்டிருந்தேன். யாரையும் வேண்டுமென்றே காயப்படுத்தும் நோக்குடன் அந்த வீடியோவை வெளியிடவில்லை. யாராவது மனம் புண்பட்டிருந்தால் அதற்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். என்னை புரிந்து கொண்டு ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறேன். இனிமேல் கவனமாக பதிவிடுவேன்என ஷர்மிஸ்தா கூறியிருந்தார்.
அதற்குள் அவரை கைது செய்ய கொல்கத்தா தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டனர். டில்லி அருகே குருகிராமில் பதுங்கியிருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்க த்துக்கு அழைத்து வரப்பட்ட அவர், இன்று கொல்கத்தா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூன் 13ம்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஷர்மிஸ்தாவுக்கு ஆதரவாக கங்கனா ரனாவத் பேசி உள்ளார். அவர் தெரிவித்ததாவது; சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஒருவரை துன்புறுத்துவது சரியல்ல. எப்போது ஒருவர் மன்னிப்பு கேட்டு, அவர் வெளியிட்ட பதிவை அழித்து விட்டாரோ, பின்னர் அவரை சிறையில் அடைத்து, துன்புறுத்துவது, அவருடைய வாழ்க்கையையே முடிப்பது மற்றும் அவருடைய பண்புகளை பற்றி கேள்வி எழுப்புவது என்பது தவறானது.
எந்தவொரு மகளுக்கும் இது நேர்ந்திட கூடாது. மேற்கு வங்காளம், வடகொரியா போல் மாறாமல் மாநில அரசு பார்த்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஒவ்வொருவருக்கும் ஜனநாயக உரிமை உள்ளது. அவர் அநாகரீக பதிவுக்காக மன்னிப்பு கோரி விட்டார். விரைவில் அவரை விடுவிக்க வேண்டும். ஏனெனில் அவர் இளம்பெண். அவருக்கென்று முழுமையாக வாழ்க்கையும், வேலையும் காத்திருக்கிறது என்றும் பனோலிக்கு ஆதரவாக கங்கனா பேசியுள்ளார்.

இதேபோல், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் ஷர்மிஸ்தாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் கூறுகையில், 'தான் தெரிவித்த கருத்துக்கு ஷர்மிஸ்தா மன்னிப்பு கேட்ட பின்பும், அவரை கொல்கட்டா போலீசார் கைது செய்தது கண்டிக்கத்தக்கது.மதச்சார்பின்மை என்பது சிலருக்கு கேடயமாகவும், மற்றவர்களுக்கு வாளாகவும் இருக்காது. அது இருவழிப் பாதையாக இருக்க வேண்டும். மேற்கு வங்க போலீசாரின் செயல்பாட்டை, நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, அனைவருக்கும் நியாயமாகச் செயல்படுங்கள்' என, பதிவிட்டுள்ளார்.

ஷர்மிஸ்தா கைது பற்றி காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சமூக வலைதளத்தில் கூறுகையில், 'இதுபோன்ற சமூக ஊடகப் பதிவுகளால், சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுத்தது என்பது தெளிவாக நிரூபிக்கப்படாவிட்டால், போலீசாரின் அதிகாரங்களை மாநில அரசு தவறாகப் பயன்படுத்துவதாகவே கருத முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இனி வாலாட்டி பாருங்க! இந்தியா முழுவதும் ராணுவம் போர் கருவிகள் சோதனை!