காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது.

குறிப்பாக மே 10ம் தேதி இந்தியா நடத்திய மிகப்பெரிய அட்டாக், இப்போதும் உலக அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. நம் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறி வைத்து 15 பிரமோஸ் ஏவுகணை மற்றும் வேறு சில ஏவுகணைகளை இந்தியா வீசியது.
இதையும் படிங்க: இனி வாலாட்டி பாருங்க! இந்தியா முழுவதும் ராணுவம் போர் கருவிகள் சோதனை!
இந்த ஏவுகணைகள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்களை ஊடுருவிக்கொண்டு, நூர் கான், ரபிக்கி, முரிட், ரஹீம் யார் கான், சுனியான், சுக்கூர் விமானப்படை தளங்கள் உட்பட 11 ராணுவ தளங்களை தகர்த்தது. ரன்வே, போர் விமானங்களை நிறுத்தி வைத்திருக்கும் இடம், ட்ரோன் ஏவுதளம், கட்டுப்பாட்டு அறைகளை குறி வைத்து இந்த அட்டாக் நடந்தது.இந்தியாவின் இந்த அடியில் தான் பாகிஸ்தானுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. இதற்கு பிறகு தான் சண்டையை நிறுத்தலாம் என்று இந்தியாவிடம் அடிபணிய ஆரம்பித்தது பாகிஸ்தான்.

சண்டையை நிறுத்தக்கோரி பாகிஸ்தான் கெஞ்சியதை அடுத்து, இந்தியா சண்டை நிறுத்ததிற்கு ஒப்புக்கொண்டது. ஆனாலும் சிந்து நதிநீரை இந்தியா தற்போதும் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநிலங்களில் போர் ஒத்திகையை நடத்தி வருகிறது. பஞ்சாப், குஜராத், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் போர் ஒத்திகை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கு பிறகு நவீன தாக்குதல் ஆயுதங்களில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 5 மடங்காகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. CII எனப்படும் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் உலகளாவிய ஆலோசனை நிறுவனமான KPMG வெளியிட்ட அறிக்கையில் இது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவின் ராணுவ பட்ஜெட் தற்போது 6.8 லட்சம் கோடியாக உள்ளது. இது 2047ம் ஆண்டுக்குள் 31.7 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.

ராணுவத்துக்கு செலவிடுவதில் தற்போது 4வது பெரிய நாடாக இருக்கும் இந்தியா, அப்போது 3வது பெரிய நாடாக உருவெடுக்கும். இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2024-25ல் 1.6 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது 2047ல் 8.8 லட்சம் கோடியாக உயரும். இந்தியாவின் ராணுவ ஏற்றுமதி இப்போது 30,000 கோடியாக உள்ளது. இது 2047ல் 2.8 லட்சம் கோடியாக உயரும். அப்போது ராணுவ தளவாட துறையில் உலகளாவிய சப்ளையராக இந்தியா இருக்கும்.
பாதுகாப்பு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவு 4 சதவீதத்திலிருந்து 8 முதல் 10 சதவீதமாக அதிகரிக்கும். ஜிடிபி எனப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் ராணுவத்துறைக்கான பங்கு 2 சதவீதத்திலிருந்து 4 முதல் 5 சதவீதமாக அதிகரிக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க இந்தியா எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்தும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முக்கியமான ராணுவ தொழில்நுட்பங்களுக்கு இந்தியா தொடர்ந்து இறக்குமதியை சார்ந்து இருக்கும்.

சிக்கலான ராணுவ தளவாடங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கையாளும் நபர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. ராணுவ தளவாட உற்பத்தியில் அரசுத் துறை மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயல்படுவது முக்கியம். வெளிநாடுகளுடனான தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் அறிவுசார் சொத்து உரிமைகள் ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க: ஆபரேசன் சிந்தூரை வைத்து கலவரத்தை தூண்ட சதி! கம்பி எண்ணும் சட்டக்கல்லூரி மாணவி!