கர்நாடக மாநிலத்தின் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை முதலமைச்சர் சித்தராமையா இன்று தாக்கல் செய்தார். அதில், தமிழக அரசால் கடுமையாக எதிர்க்கப்படும் மேகதாது அணைத் திட்டத்திற்குத் திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை (Revised DPR) தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
மேகதாது திட்டத்திற்கான புதிய மற்றும் திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை (DPR) விரைவில் தயாரிக்கப்படும். இந்த புதிய அறிக்கை தயாரிக்கப்பட்டவுடன், உடனடியாக மத்திய அரசின் ஒப்புதலுக்காக (Central Water Commission) அனுப்பப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீருக்கு முன்னுரிமை: தமிழகத்தின் சட்டப் போராட்டங்களைத் தவிர்க்கும் விதமாக, இந்த முறை இத்திட்டம் "குடிநீருக்காக மட்டும்" (Drinking Water Only) என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட உள்ளது. பாசனத்திற்கானக் குறிப்புகளைத் தவிர்ப்பதன் மூலம் சட்ட ரீதியானப் பாதுகாப்பைப் பெற கர்நாடகா திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: கூட்டாட்சியை காக்க தமிழகத்துடன் கைகோர்ப்போம்..! மு.க. ஸ்டாலினுக்கு சித்தராமையா கடிதம்!

திட்ட மதிப்பு உயர்வு: கடந்த 2019-ல் ₹4,500 கோடியாக மதிப்பிடப்பட்ட இத்திட்டத்தின் செலவு, தற்போது ₹14,000 கோடிக்கும் மேலாக உயர்ந்துள்ளது. தாமதமாகும் ஒவ்வொரு ஆண்டும் செலவு மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேகதாது திட்டம் தொடர்பாகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது நமது மாநிலத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய சட்ட ரீதியான வெற்றி எனச் சித்தராமையா பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் 99 மீட்டர் உயரமும், 735 மீட்டர் நீளமும் கொண்ட கான்கிரீட் அணை கட்டப்பட உள்ளது. இதன் மொத்தக் கொள்ளளவு 67.16 டி.எம்.சி (TMC) ஆகும்.
தமிழகத்தின் டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் தமிழக அரசு இத்திட்டத்தை தமிழகத்தைப் பாலைவனமாக்கும் முயற்சி எனக் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், கர்நாடகாவின் இந்த பட்ஜெட் அறிவிப்பு காவிரி நீர்ப்பகிர்வு விவகாரத்தில் மீண்டும் அனலைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: போதை மாத்திரை கொடுத்து வன்கொடுமை.... திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவி புகாரால் பெங்களூருவில் பரபரப்பு!