திருச்சியில் திமுகவின் மாநில மாநாடு இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது. இது திமுகவின் 12வது மாநில மாநாடாகும். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூர் பகுதியில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாட்டுத் திடல் அமைக்கப்பட்டு, கூடுதலாக 200 ஏக்கர் வாகன நிறுத்தத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மொத்தம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டுத் திடலில் மட்டும் 3 லட்சம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. 24 ஆயிரம் வாகனங்கள் வரும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை 3 மணியளவில் மாநாட்டுத் திடலுக்கு வருகை தர உள்ளார். அவர் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களை சந்தித்த பின்னர் மேடைக்கு வருகை தருவார். மாலை 5:30 மணியளவில் கொடியேற்றி மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாடு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் மிக முக்கியமான அரசியல் நிகழ்வாகக் கருதப்படுகிறது. திருச்சி என்றாலே திமுகவுக்கு திருப்புமுனை என்ற வரலாறு உள்ளது.
இதையும் படிங்க: "ONE NATION... ONE ELECTION"..!! நோயைவிட மோசம்... முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு..!!
2021ஆம் ஆண்டு இதே பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் ஏழு விதமான சூளுரைகளை ஸ்டாலின் அறிவித்து ஆட்சியைப் பிடித்தார். அதனால் இந்த மாநாட்டிலும் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். திமுகவின் இந்த பிரம்மாண்ட மாநாடு அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவின் மாநாடு நடைபெறும் சிறுகனூர் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதையும் படிங்க: தப்பு பண்ணீட்டீங்களே ஸ்டாலின்... திமுகவை அழிக்கப்போகும் அந்த ரெண்டு பேர்... வார்னிங் கொடுத்த இபிஎஸ்...!