உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் காவல்துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட கான்ஸ்டபிள்களுக்கு பணி நியமன கடிதங்களை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு காவலர்களுக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது: ஒரு காலத்தில் உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருந்தது. குண்டர்களின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது. மக்கள் சுதந்திரமாக வெளியே நடமாட அஞ்சினர். நிலம் அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, கொலைகள் அதிகம் நடந்தன.

2017 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு உத்தரபிரதேசத்தில் காவல் படை நவீனமயமாக்கல் தொடங்கியது. பிரதமர் மோடியின் தலைமையில் நாடு தழுவிய அளவில் இந்திய காவல் படைகளின் நவீனமயமாக்கல் தொடங்கியிருந்தாலும், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்த பிறகு 2017 ஆம் ஆண்டுதான் உ.பி.,யில் இந்த விஷயத்தில் முயற்சிகள் தொடங்கப்பட்டது.
இதையும் படிங்க: நக்சல் ஒழிப்பு படை வீரர்களுக்கு கவுரவம்.. வளர்ச்சிப் பாதையில் சத்தீஸ்கர் என அமித் ஷா பெருமிதம்.!
இன்று 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாநில காவல் துறையில் பணி வாய்ப்பை பெற்றுள்ளீர்கள். முந்தைய ஆட்சிகளில் நடந்த போலீஸ் பணி நியமனத்தில் ஜாதி, அரசியல் வாதிகளின் செல்வாக்கு போன்றவை முக்கிய இடம் பிடித்தன. ஆனால், தற்போது முற்றிலும் தகுதிக்கும், திறமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இங்கு அமர்ந்திருக்கும் நீங்கள் பல்வேறு ஜாதிகளை சேர்ந்தவர்கள். ஆனால், நீங்கள் அனைவரும் மக்கள் பணியாற்றும் போலீசார். காவல் துறை முன்பு போல் இல்லை. சிசிடிவி கேமராக்கள், அதிநவீன ரோந்து வாகனங்கள், இன்டர்னெட் வசதி என ரோந்து, காவல் பணிக்கென நவீன அம்சங்கள் வந்துவிட்டன. மக்கள் பணியை மனதில் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் சர்வசாதாரணமாக நம் நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தினர்.
ஆமதாபாத், மும்பை, டில்லி, ஜெய்ப்பூர், கோவை என பல இடங்களில் தாக்கினர். காஷ்மீரை பற்றி சொல்லத் தேவையில்லை. அங்கு எப்போதும் பாதுகாப்பற்ற சூழல் தான் நிலவியது. 2014ல் பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பாஜ ஆட்சி அமைந்த பின், நாட்டின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. மோடி ஆட்சியில் பயங்கரவாதிகள் மூன்று முறை தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டனர்.
உரி, புல்வாமா, பஹல்காம் என மூன்று முறை தாக்கினர். உரி தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. புல்வாமா தாக்குதலில் போது ஏர் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு பின், ஆபரேஷன் சிந்துார் மூலம், பயங்கரவாதிகளின் முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. பயங்ரவாதத்தை வேரறுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இத்தனை பெரிய தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. சிரித்துக்கொண்டே ஆணவத்துடன் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த பயங்கரவாதிகள், ஆபரேஷன் சிந்துாருக்கு பின் அழுது கொண்டே மீடியாக்களில் பேட்டி அளித்தனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை உலகிற்கு தெரிவிக்கவும் பிரதமர் மோடி ஏற்பாடு செய்தார். அந்த வகையில் கடந்த 11 ஆண்டு கால மோடி ஆட்சியில் மக்கள் பாதுகாப்பை உணர்கின்றனர். 11 ஆண்டுகளுக்கு முன், நம் நாட்டின் 11 மாநிலங்களில் நக்சல்களின் கொடி பறந்தது. நக்சல்வாதிகள் வளர்ச்சிப் பணிகளை தடுத்து நிறுத்தினர். அவர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது.
நக்சல்களுக்கு எதிரான மத்திய அரசின் கடும் நடவடிக்கைகளால், இன்று வெறும் 3 மாவட்டங்களில் மட்டுமே நக்சலைட்கள் வலம் வருகின்றனர். அவர்களின் நடமாட்டம், ஆதிக்கம் சுருக்கப்பட்டுவிட்டது. அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் நக்சல்வாதம் நாட்டை விட்டு முற்றிலும் விரட்டப்படும் என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன் என அமித் ஷா தெரிவித்தார்..
இதையும் படிங்க: மம்தா பானர்ஜி அரசுக்கு இருக்கு வேட்டு! மோடி ஆட்சியில இதுக்கெல்லாம் இடமே இல்லை.. அமித்ஷா சரவெடி..!