தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) பெயரைத் தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் போலி அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இத்தகைய மோசடிகள் குறித்துத் தாமாக முன்வந்து விசாரணை நடத்திய ஆணையம், இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) மற்றும் தனிநபர்கள், 'தேசிய மனித உரிமைகள் ஆணையம்' என்ற பெயரையோ அல்லது அந்த பெயரைச் சற்றே மாற்றியமைத்து ஆணையத்தை போன்ற தோற்றத்தையோ உருவாக்கி மோசடிகளில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய போலி அமைப்புகள், ஆணையத்தின் அதிகாரப்பூர்வ லோகோவைத் தவறாகப் பயன்படுத்தி அடையாள அட்டைகளைத் தயாரிப்பதோடு, அதிகாரிகளைப் போல நடித்துப் பொதுமக்களிடம் பண வசூல் செய்வது மற்றும் மிரட்டல்களில் ஈடுபடுவது போன்ற புகார்கள் அதிகரித்துள்ளன.

மாநிலத் தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறைத் தலைவர்களுக்கு (DGP) அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீஸில், தங்கள் மாநிலங்களில் இயங்கும் இத்தகைய போலி அமைப்புகளைக் கண்டறிந்து, அவர்கள் மீது உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என NHRC அறிவுறுத்தியுள்ளது. உண்மையான தேசிய மனித உரிமைகள் ஆணையம் என்பது ஒரு சட்டரீதியான அமைப்பு என்றும், இது போன்ற எந்தவொரு தனியார் அமைப்புகளுக்கும் ஆணையம் அங்கீகாரம் வழங்குவதில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக எம்பி சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
பொதுமக்கள் இத்தகைய போலி அமைப்புகளிடம் ஏமாற வேண்டாம் என்றும், மனித உரிமை மீறல்கள் குறித்து நேரடியாக ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட மாநில மனித உரிமை ஆணையங்கள் மூலமாகவோ புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை மூலம், போலி அமைப்புகளின் பெயரில் நடக்கும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் படகு கவிழ்ந்து விபத்து...! பெங்களூரு பெண் பலி - இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!