இண்டியா கூட்டணியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செல்வபெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்துகொண்டது தொடர்பாக சிலர் புரிதல் இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் தமிழகத்துக்கு எந்த நிதியும் ஒதுக்காமல் முழுமையாகப் புறக்கணித்திருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் கல்வி நிதி ஒதுக்கப்படும் என கூறுவது சர்வாதிகாரம் இல்லையா?

காங்கிரஸ் ஆட்சியின்போது ஒரு திட்டத்தை கொண்டு வந்தோம். அந்தத் திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது என அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இருந்தபோதும் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு வழங்காமல் இருக்கவில்லை. மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் அரவணைத்து ஆட்சி செய்ய வேண்டும். எனவே, பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் வரும் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பதிலடியைக் கொடுப்பார்கள்.

ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை ஆன்மிகத்தை அரசியலாக்குகின்றன. மத ரீதியாகவும், சாதிய ரீதியாகவும் நாட்டைப் பிரிக்க வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ்-ன் திட்டம். அதைதான் பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. பெரியார் தன்னுடைய சாதி அடையாளத்தைத் துறந்தவர். ஆனால், அவரை சாதி அடையாளத்துடன் குறிப்பிட்டு யுபிஎஸ்சி தேர்வில் கேள்விகள் கேட்டிருப்பது தமிழகத்தை கலவர பூமியாக்கும் பாஜகவின் திட்டத்தின் வெளிப்பாடு ஆகும்.
இதையும் படிங்க: பயாஸ்கோப் காட்டுகிறார் சூனாபானா பழனிச்சாமி.. வண்டி வண்டியாக கழுவி ஊற்றிய ஆர்.எஸ். பாரதி.!!

இண்டியா கூட்டணியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. இது தமிழக மக்களுக்கான கூட்டணி ஆகும். தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் கூட்டணி. தமிழகத்தை கடந்து தேசத்தைப் பாதுகாக்கும் கூட்டணி ஆகும். இந்த கூட்டணி உடையும் என யாரும் பகல் கனவு காண வேண்டாம்." என்று செல்வபெருந்தகை தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதிய எம்.ஜி.ஆர். பவன் கல்யாண்.. நயினார் நாகேந்திரன் குதூகலமாக அறிவிப்பு.!!