இந்தியாவில் மக்களவைக்கு 543 தொகுதிகளும், மாநில சட்டப்பேரவைகளுக்கு சுமார் 4,123 தொகுதிகளும் உள்ளன. உத்தரபிரதேசத்தில் மட்டும் 80 மக்களவை தொகுதிகளும் 403 சட்டப்பேரவை தொகுதிகளும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளும் 234 சட்டப்பேரவை தொகுதிகளும் உள்ளன. சில சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு மக்களவை தொகுதி மட்டுமே உள்ளது. இந்த அளவுக்கு பெரிய தேர்தல் அமைப்பில், அடிக்கடி நடைபெறும் தேர்தல்கள் நிர்வாகத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றன என்பது அரசின் நிலைப்பாடு.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் என்றாலும், மக்களவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால் மாநிலங்களில் ஐந்தாண்டு முடிவடையும் போது தனித்தனியாக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறுகின்றன. இதனால் தேர்தல் செலவுகள் அதிகரிக்கின்றன, நிர்வாகத் திறன் பாதிக்கப்படுகிறது, தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வளர்ச்சிப் பணிகள் தடைபடுகின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் முன்வைக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி அறிக்கை அளித்தது. அதைத் தொடர்ந்து 2024 டிசம்பர் குளிர்காலக் கூட்டத்தொடரில் அரசியலமைப்பு 129-வது திருத்த மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அரசியலமைப்பு திருத்தம் என்பதால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
இதையும் படிங்க: தவெக ஆட்சியில் அடக்கப்படும் ஜென்-இசட் குரல்? தஞ்சை சம்பவத்தில் ஆளும் அரசின் மௌனம் ஏன்..??
பாஜக எம்.பி. பி.பி.சவுத்ரி தலைமையில் அமைந்த இந்தக் குழு சட்ட நிபுணர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோருடன் விரிவான ஆலோசனைகளை நடத்தி வருகிறது. நேற்று டெல்லியில் நடைபெற்ற கூட்டுக்குழுக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பி.சிதம்பரம், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது என்றும் இந்த யோசனையை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

கூட்டம் முடிந்ததும் பி.பி.சவுத்ரி நிருபர்களிடம் பேசுகையில், “பல்வேறு தரப்பினருடன் பலமுறை ஆலோசித்தோம். அவர்களில் 99 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றவர்களும் ஆதரவு தெரிவித்தால் 2029 மக்களவைத் தேர்தலிலேயே இந்தத் திட்டத்தை அமல்படுத்தலாம்” என்றார். அரசியலமைப்பு திருத்தம் 2028-க்குள் நிறைவேற்றப்பட்டு மாநில அரசுகளின் ஒப்புதல் கிடைத்தால் இது சாத்தியம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் 2029-ல் அமலுக்கு வந்தால் பல மாநிலங்களின் பதவிக்காலம் சுருங்கும். 2026-ல் தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகியவற்றில் ஆட்சியில் இருக்கும் கட்சிகளின் பதவிக்காலம் சுமார் மூன்று ஆண்டுகளில் முடிந்துவிடும். அதாவது, தமிழகத்தில் தவெக அரசின் பதவிக்காலம் 3 ஆண்டுகளில் முடிந்துவிடும் ஆபத்து இருக்கிறது.
2027-ல் தேர்தல் உள்ள உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா, குஜராத், மணிப்பூர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றில் புதிய அரசுகளின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாகக் குறையும். 2028-ல் தேர்தல் நடைபெறும் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பதவிக்காலம் ஒரே ஆண்டாகச் சுருங்கும். இதனால் பாஜக அல்லாத மாநிலங்கள் இந்தத் திட்டத்தை எதிர்ப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிடத்தக்க வகையில், சுதந்திரம் பெற்ற பிறகு 1952 முதல் 1967 வரை நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றன. பின்னர் பல்வேறு காரணங்களால் இது மாறியது. தற்போது கூட்டுக்குழுவின் ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையம் ஆறு மாத முன்னறிவிப்பு இருந்தால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் நாட்டின் நிர்வாகத் திறனையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்துமா அல்லது கூட்டாட்சி அமைப்பைப் பாதிக்குமா என்ற விவாதம் தொடர்கிறது.
இதையும் படிங்க: பெயரை மாற்றினாலும் ஸ்டாலின் கொண்டுவந்த திட்டங்கள் அழியாது...தவெக அரசை சாடிய ஆர்.எஸ்.பாரதி!