ஒன்றிய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க எதிர்க்கட்சிகள் ஒருமித்த முடிவை எடுத்துள்ளன. டெல்லியில் இன்று நடைபெற்ற 'இந்தியா' (I.N.D.I.A.) கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் முன்மொழியப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவைத் தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. "இந்த மசோதாவிற்கு எதிராக நாங்கள் நாடாளுமன்றத்தில் வாக்களிப்போம் என கார்கே திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பெண்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தினார்:
நாங்கள் கொள்கை ரீதியாக மகளிர் இடஒதுக்கீட்டை முழுமையாக ஆதரிக்கிறோம். ஆனால், அந்த மசோதா கொண்டு வரப்படும் விதத்தில் எங்களுக்குப் பல ஐயங்கள் உள்ளன. பெண்களுக்கான அதிகாரத்தை உடனடியாக வழங்காமல், அதைத் தொகுதி மறுவரையறையோடு பிணைப்பது முறையல்ல என அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் நாளை கருப்புக்கொடி போராட்டம்! தொகுதி மறுவரையறைக்கு எதிராக சிபிஐ(எம்) அதிரடி!

தொகுதி மறுவரையறை மசோதாவின் பின்னணியில் பாஜகவின் அரசியல் தந்திரம் ஒளிந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்: தொகுதி மறுவரையறை என்ற பெயரில் பாஜக தந்திரம் செய்கிறது. இதன் மூலம் மாநிலங்களுக்கு இடையிலான அரசியல் சமநிலையைச் சீர்குலைக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள்" என மல்லிகார்ஜுன கார்கே சாடினார்.
ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் திமுக போன்ற கட்சிகள் தெரிவித்தது போல, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை அதிகரிப்பது தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என இக்கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாமல் இருப்பதை உறுதி செய்ய 'இந்தியா' கூட்டணி உறுதியாக உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தி, கபில் சிபல், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மற்றும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றுத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கத்தி கழுத்துக்கு வந்துடுச்சு..! ஓரணியில் திரள முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!!