ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாக்., பயங்கரவாதிகள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர். பயங்கரவாதிகளுக்கு பதில் அடி தரும் வகையில், இம்மாதம் 6ம் தேதி நள்ளிரவு, ஆபரேஷன் சிந்துார் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு - காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்திய படைகள் தாக்கி அழித்தன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்ததில் இருந்து பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தி வந்தது. எல்லை மாநிலங்களை நோக்கி வந்த ட்ரோன், ஏவுகணைகளை நம் ராணுவம் சுட்டு வீழ்த்தி பதிலடி கொடுத்த நிலையில் போர் பதற்றம் அதிகரித்தது.

இந்த சமயத்தில் தான் நேற்று மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த சம்மதம் தெரிவித்ததாக கூறினார். அவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் இருதரப்பு சண்டை நிறுத்தத்தை இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியும் உறுதி செய்தார்.மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமலானது. சண்டை நிறுத்தத்தால் எல்லை பகுதியான ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி வருகிறது.

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்தது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். பலரின் மரணத்திற்கும், அழிவுக்கும் வழிவகுக்கும் தாக்குதலை நிறுத்த வேண்டிய நேரம் என்பதை புரிந்துகொள்ளும் வலிமை, ஞானம், மன உறுதியை பெற்ற இந்தியா, பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த தலைமையை பார்த்து பெருமைபடுகிறேன்.
இதையும் படிங்க: ‘முதலில் ராஜ துரோகி, இப்போது ராம துரோகி’..! ராகுல் காந்தி மீது பாஜக பாய்ச்சல்..!

இரு தரப்பின் துணிச்சலான முடிவால் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் மரணம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுக்க அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்ததில் நான் பெருமைப்படுகிறேன். விவாதிக்கப்படாவிட்டாலும் இந்தியா, பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போகிறேன்.அதுமட்டுமின்றி ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் தொடர்பாக ஒரு தீர்வை எட்ட முடியுமா என்பதை பார்க்க இரு நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவேன். இந்தியா பாகிஸ்தான் தலைவர்களை கடவுள் ஆசீர்வதிப்பார் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.


இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளனர். அந்தக் கடிதத்தில், ஏற்கனவே கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்ட மாநிலங்களவையின் எதிர்க் கட்சி தலைவராக கடிதம் எழுதியிருந்தேன். அதனை நினைவுகூருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இதுக்குத்தான் காத்திருந்தோம்.. மோடி அரசுக்கு ராகுல் காந்தி, காங்கிரஸ் பாராட்டு..!