பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நுர் கான் விமானப்படை தளம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் ஒப்பு கொண்டுள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்கிற பெயரில் இந்திய பாதுகாப்புப் படை மே 7ஆம் தேதி அதிகாலை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவமும் அடுத்தடுத்த நாட்களில் இந்தியா மீது ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஆனால், இவற்றை இந்தியாவின் வான் பாதுகாப்புத் தடுப்பு சாதனங்கள் நடுவானிலேயே தாக்கி அழித்தன.

அத்துடன், பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மீதும் இந்தியா ஏவுகணைகளை வீசி துல்லியத் தாக்குதலை நடத்தியது. இதில், ராவல்பிண்டி நுர் கான், சர்கோதாவின் முஷாப், போலாரி மற்றும் ஜகோபாபாத்தின் ஷபாஸ் ஆகிய விமானப்படை தளங்கள் சேதமடைந்தன. இதை உறுதிப்படுத்தி செயற்கைக்கோள் படங்களும் வெளியாயின. ஆனால், இதுநாள் வரை இந்தியாவின் தாக்குதலால் விமானப்படை தளங்கள் சேதமடைந்ததை பாகிஸ்தான் அரசு உறுதி செய்யவில்லை. மேலும் பாகிஸ்தான் தாக்குதலில் ஏற்பட்ட சேதத்தை பாகிஸ்தான் ஒப்புக் கொண்ட வரலாறும் கிடையாது.

இந்நிலையில், தற்போது அதை பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது. தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் பேசுகையில், "ராணுவ தளபதி அசிம் முனிர் கடந்த மே 10-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார். அப்போது, இந்தியாவின் ஏவுகணை தாக்குதலில் ராவல்பிண்டியில் உள்ள நுர் கான் விமானப்படை தளம் உட்பட பல விமானப் படை தளங்கள் சேதமடைந்துள்ளதாக என்னிடம் தெரிவித்தார். அப்போது அவரின் குரலில் தன்னம்பிக்கையும் தேசபக்தியும் இருந்தது. இதை கடவுள் மீது சத்தியம் செய்து சொல்கிறேன்.
இதையும் படிங்க: பாக்.-ஐ விட 20 மடங்கு அதிகமாக இந்தியா பணம் பெற்றாலும் திருப்பி செலுத்தாது..! ஏன் தெரியுமா?
நாட்டைக் காப்பாற்ற நமது விமானப்படை உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. அத்துடன் சீனாவின் நவீன சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியது." என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்கப் பொருட்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்க இந்தியா விருப்பம்..! கிளப்பிவிடும் அதிபர் ட்ரம்ப்..!