ஒடிசாவில், தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. கடந்த 2024 ஜூன் மாதம் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜக ஆட்சி அமைந்த பிறகு 6வது முறையாக இன்று பிரதமர் மோடி ஒடிசாவுக்கு சென்றார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்த ரோடு ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும் ஜனதா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ரூ.18,600 கோடி மதிப்பிலான 105 வளர்ச்சி திட்ட பணிகளை மோடி தொடங்கி வைத்தார். பின்னர் டொனால்ட் டிரம்ப் தன்னை அமெரிக்காவுக்கு அழைத்ததையும், அதனை அவர் நிராகரித்தது ஏன்? என்பது பற்றியும் பிரதமர் மோடி விளக்கினார்.

பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசு முறை பயணமாக 3 நாடுகளுக்கு கடந்த 15ம் தேதி காலையில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார். முதலில் அவர் இஸ்ரேல் அருகே உள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்து இருக்கும் தீவு நாடான சைப்ரஸ் நாட்டுக்கு சென்றார். அதன்பிறகு அங்கிருந்து கனடா புறப்பட்டு சென்றார். கனடாவில் நடக்கும் ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசுவதாக இருந்தது. ஆனால் இஸ்ரேல் - ஈரான் மோதல் காரணமாக டிரம்ப் ஜி 7 மாநாட்டில் இருந்து அவசரமாக அமெரிக்கா சென்றார்.
இதையும் படிங்க: வன்முறையை களையெடுப்பேன்...நக்சலிசத்தை கருவறுப்பேன்... சபதம் எடுத்த பிரதமர் மோடி

அமெரிக்காவில் இருந்த டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியுடன் 35 நிமிடங்கள் பேசினார். அப்போது தான் கனடா வரை வந்துவிட்டீர்கள். பக்கத்தில் உள்ள அமெரிக்கா வந்தால் டின்னர் சாப்பிட்டு கொண்டே பேசலாம் என்று டிரம்ப் அழைத்தார். ஆனால் பிரதமர் மோடி அந்த அழைப்பை மறுத்து திட்டமிட்டப்படி கனடாவில் இருந்து குரேஷியா சென்றார். இந்நிலையில் தான் அதிபர் டிரம்பின் அழைப்பை ஏற்க மறுத்தது ஏன்? என்பது பற்றி பிரதமர் மோடி விளக்கி உள்ளார். இதுக்குறித்து பேசிய பிரதமர் மோடி, 2 நாட்களுக்கு முன்புதான் நான் ஜி 7 உச்சி மாநாட்டிற்காக கனடாவிற்கு சென்றிருந்தேன்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் என்னை அழைத்தார். கனடா வந்திருப்பதால் வாஷிங்டன் (அமெரிக்கா) வழியாக செல்லுங்கள். நாம் ஒன்றாக டின்னர் சாப்பிட்டு கொண்டே பேசுவோம் என்று கூறினார். இந்த அழைப்பை மிகுந்த வற்புறுத்தலுடன் முன்வைத்தார். நான் அமெரிக்க அதிபரின் அழைப்பை மறுத்தேன். அழைப்பிற்கு நன்றி என்று சொன்னேன். மகாபிரபுவின் தேசத்திற்கு (ஒடிசா) செல்வது எனக்கு மிகவும் முக்கியம் என்பதால் நான் அவரது அழைப்பை பணிவுடன் நிராகரித்தேன். மகாபிரபு மீதான உங்கள் அன்பும் பக்தியும் என்னை இந்த மண்ணுக்குக் கொண்டு வந்தது. ஒடிசா மக்கள் கடவுள் பூரி ஜெகநாதரை தெய்வமாக வணங்கி வருகின்றனர். இந்த பூரி ஜெகநாதரை தான் பிரதமர் மோடி, மகாபிரபு என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கே பெருமை! பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!