டெல்லி: முதல் முறையாக வேலைவாய்ப்பு பெற்று பி.எப். கணக்கில் இணைந்த 15 லட்சம் இளம் ஊழியர்களுக்கு ‘பிரதம மந்திரி விக்சித் பாரத் வேலைவாய்ப்பு திட்டம்’ மூலம் மொத்தம் 15,000 ரூபாய் ஊக்கத்தொகையின் முதல் தவணையை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவிக்கிறார்.
நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்கீழ், தனியார் துறையில் புதிதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு மொத்தம் 15,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாதச் சம்பளம் ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும், குறைந்தது ஆறு மாதங்கள் பணியில் இருக்க வேண்டும் என்பது தகுதி நிபந்தனைகளில் முக்கியமானவை.
ஆறு மாதப் பணியை முடித்தவர்களுக்கு முதல் தவணையாக 7,500 ரூபாயும், ஒரு ஆண்டு பணியை முடித்த பிறகு இரண்டாவது தவணையாக மீதமுள்ள 7,500 ரூபாயும் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும், புதிய ஊழியர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு ஒரு ஊழியருக்கு மாதம் 3,000 ரூபாய் என இரண்டு ஆண்டுகள் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும்.
இதையும் படிங்க: டெலிகிராம் மீதான தடை! சரிதான்!! டெல்லி ஹைகோர்ட் திட்டவட்டம்! மத்திய அரசின் முடிவுக்கு க்ரீன் சிக்னல்!

கடந்த ஏப்ரலில் 4.4 லட்சம் ஊழியர்களுக்கு 446 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 15 லட்சம் ஊழியர்களுக்கான முதல் தவணைத் தொகையாக 2,400 கோடி ரூபாயை நேரடியாக வங்கிக் கணக்குகளுக்கு விடுவிக்க உள்ளார்.
இத்திட்டம் தொடங்கிய ஆகஸ்ட் 2025 முதல் இதுவரை 63 லட்சம் பேர் புதிதாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் 30 சதவீதம் பெண்கள் ஆவர். 2027ஆம் ஆண்டுக்குள் 3 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக 99,446 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு நேரடி நிதி உதவி அளிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை ஊக்கப்படுத்தும் இந்தத் திட்டம், இளம் தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதையும் படிங்க: சிந்து நதி நீர் ஒப்பந்தம் காலாவதி ஆகிருச்சி! பாக்., பலன்களை எதிர்பார்க்க கூடாது! இந்தியா திட்டவட்டம்!