ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்த பிறகு, முதல் முறையாக பிரதமர் மோடி இன்று வெளிநாடு புறப்பட்டு சென்றார். சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளில் இன்று முதல் 5 நாள் பயணம் மேற்கொள்கிறார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான நமது போரில் இந்தியாவுக்கு உறுதியான ஆதரவை அளித்த நட்பு நாடுகளுக்கு நன்றி சொல்லவும், பயங்கரவாதத்தை சமாளிப்பது தொடர்பாக, உலக நாடுகளிடையே புரிதலை வலுப்படுத்தவும் இந்த 3 நாடுகள் பயணம் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டில்லியில் இருந்து கிளம்பிய பிரதமர் மோடி முதலில் சைப்ரஸ் செல்கிறார். தலைநகர் நிக்கோசியாவில் அந்நாட்டின் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்சை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடத்துகிறார்.
இதையும் படிங்க: வரலாற்றிலேயே மிகப்பெரிய இழப்பீடு!! விமான விபத்திற்கு ரூ.1000 கோடி இன்சூரன்ஸ் க்ளைம்..?
அதிபர் நிக்கோஸ் அழைப்பின் பேரில் இன்றும் நாளையும் சைப்ரஸ் நாட்டுக்கு செல்கிறேன். மத்திய தரைக் கடல் பகுதி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு சைப்ரஸ். இருநாடுகளிடையே உள்ள
வரலாற்று சிறப்புமிக்க உறவை வலுப்படுத்தவும், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் எனது சைப்ரஸ் பயணம் மிகப்பெரிய வாய்ப்பை வழங்கும் என பிரதமர் மோடி கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளில் சைப்ரஸ் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. சைப்ரசில் 2 நாள் பயணம் முடிந்ததும் 16, 17 ஆகிய தேதிகளில் கனடாவில் 2 நாள் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி,
(Kananaskis) கனனாஸ்கிஸ் நகரில் நடக்கும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய ஏழு நாடுகளை உள்ளடக்கியது ஜி 7 அமைப்பு.
கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில் பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார். இந்தியா, கனடா இடையிலான உறவு கடந்த 2 ஆண்டாக மோசமான நிலையில் உள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. கனடா நம்பவில்லை. அதைத் தொடர்ந்து, இந்தியா-கனடா தலைவர்கள் மாறி மாறி காரசாரமாக குற்றம்சாட்டிக் கொண்டனர்.

இதனால் இருநாட்டு உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கனடா பயணத்தை பிரதமர் மோடி தவிர்த்து விடுவார் என, முதலில் தகவல்கள் வெளியாயின. அப்படித்தான் பல நாடுகளும் நினைத்தன. ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கி கனடாவுக்கு செல்ல பிரதமர் மோடி முடிவெடுத்திருப்பது இந்தியாவின் ராஜ தந்திரமாக பார்க்கப்படுகிறது.
எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட விவகாரங்களில் உலகம் சந்தித்து வரும் சவால்களை பற்றியும், இந்த விஷயங்களில் உலக நாடுகளின் ஒத்துழைப்பு எந்தளவுக்கு அவசியமானது என்பது பற்றியும் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி விரிவாக பேசுவார் என வெளியுறவுத்துறை வட்டாரங்கள் கூறின. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கவும் மாநாட்டை மோடி பயன்படுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குரோஷியாவுக்கு 18 ம்தேதி மோடி செல்கிறார். அதிபர் (Zoran Milanovic)ஜோரன் மிலானோவிக், பிரதமர் (Andrej Plenkovic) ஆன்ட்ரெஜ் பிளென்கோவிக் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். குரோஷியா செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடிதான். இரு நாடுகளும் பல துறைகளில் பரஸ்பரம் ஒத்துழைப்பை பரிமாறிக் கொள்ள எனது குரோஷிய பயணம் உதவிகரமாக இருக்கும் என மோடி கூறியுள்ளார். 3 நாடுகளில் 5 நாள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு வரும் 19ம் தேதி பிரதமர் மோடி டில்லி திரும்புவார் என வெளியுறவுத்துறை கூறியது.
இதையும் படிங்க: செத்துட்டேன்னு தான் நினைச்சேன்! உயிர் பிழைச்சதை நம்ப முடியல! மவுனம் கலைத்தார் விபத்தில் தப்பிய விஸ்வாஸ் குமார்..