குஜராத்தின் ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து 242 பேருடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நிமிடத்தில் கட்டடத்தில் விழுந்து நொறுங்கியது. அரசு டாக்டர்கள், மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் விமானம் விழுந்ததில், அதில் தங்கியிருந்த 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
விமானத்தில் பயணித்த ஒருவர் தவிர, பயணிகள், பணியாளர்கள் உட்பட 241 பேரும் இறந்தனர். விழுந்து நொறுங்கிய விமானம் தீப்பிடித்து எரிந்ததால், பலரது உடல்கள் கருகின. இந்த விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இறந்தார்.

இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அவர்களின் உறவினர்களின் டிஎன்ஏ மூலம் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா நிறுவன விமானம், இப்போது டாடா குழுமத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: 1206 அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமானது.. விஜய் ரூபானி வாழ்க்கையில் சோக சம்பவம்..!
விமானத்தின் இரு இன்ஜின்களும் செயல் இழந்தன, பறவை மோதியது, எரிபொருள் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டது என யூகத்தின் அடிப்படையில் விபத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தால் தான், உண்மை காரணம் தெரிய வரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் ஆமதாபாத்தில் விழுந்து நொறுங்கிய விமானம் 2013ம் ஆண்டின் போயிங் 787 மாடல். இது, 2021ல் 115 மில்லியன் அமெரிக்க டாலருக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.
இதன் தற்போதைய மதிப்பு 978 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மான்ட்ரில் ஒப்பந்தம் - 1999ன் படி, விபத்தில் இறந்த ஒவ்வொரு பயணிக்கும் தலா 1.47 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர விமானம் மெடிக்கல் காலேஜ் விடுதியில் மோதியதில் பலர் இறந்துள்ளனர். இதனால் ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. ஏர் இந்தியா, ஆண்டுதோறும் 300 விமானங்களுக்கு 1.70 லட்சம் கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பை பெற்றுள்ளது.

இந்த பாலிசி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ல் புதுப்பிக்கப்படுகிறது. இப்போது விபத்துக்குள்ளான ட்ரீம்லைனர் விமானம் ஒன்றிற்கு, அதிகபட்சமாக 2,380 கோடி ரூபாய் வரை இன்சூரன்ஸ் செய்துள்ளது.
உள்நாடு மட்டுமின்றி சர்வதேச இன்சூரன்ஸ் நிறுவனங்களுடனும் ஏர் இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பும் இணைந்தே, விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும். ஒட்டுமொத்தமாக 1,000 கோடி ரூபாய் வரை இன்சூரன்ஸ் கிளைம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2020ல் கேரளாவின் கோழிக்கோடு விமான விபத்தில், 585 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் கிளைம் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஆமதாபாத் விமான விபத்து நாட்டின் விமான வரலாற்றிலேயே மிகப்பெரிய இன்சூரன்ஸ் கிளைமை பதிவு செய்யும் என தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: விமான விபத்தில் தப்பியது ஒருவரல்ல.. இருவர்! உடம்பெல்லாம் நடுக்கத்துடன் விவரிக்கும் இளம்பெண்..!