காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாங்கள் தான் இந்தியா - பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் இல்லையேல் அணுஆயுத போராக கூட மாறியிருக்கும் என்றும் கூறி வருகிறார். டிரம்பின் இந்த கூற்றை இந்தியா முற்றிலுமாக புறம்தள்ளிவிட்டது. அமெரிக்காவின் தலையீடு எதுவுமே இல்லை என்று பலமுறை நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறிவிட்டார். இதற்கிடையே தான் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் ‛சங்கதன் ஸ்ரஜன் அபியான்' என தொழிலாளர் மாநாடு நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி கலந்துக்கொண்டு பேசினார். அப்போது, இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்திவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதையும் படிங்க: டிரம்புக்கு எதுக்கு நன்றி சொல்லணும்? ஜெய்சங்கர் தக் லைஃப் ரிப்ளை!!

எனக்கு இப்போது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸை சேர்ந்தவர்களை பற்றி நன்கு தெரியும். அவர்கள் மீது சிறிதளவு அழுத்தம் கொடுத்தால் போதும். அவர்கள் பயந்துவிடுவார்கள். அமெரிக்க அதிபரிடம் இருந்து ஒரு போன் வந்ததுமே மோடி சரணடைந்துவிட்டார். டிரம்ப் போன் செய்து ‛மோடி ஜி என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டு ‛நரேந்திரா சரணடையுங்கள்' என்று கூறினார். உடனே மோடி, ‛எஸ் சார்' என சரணடைந்துவிட்டார். டிரம்பின் சிக்னலை மோடி ஏற்கிறார்.

நீங்கள் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும். 1971ல் பாகிஸ்தானை உடைத்து வங்கதேசம் உருவாக்கப்பட்டது. இந்த போரின்போது அமெரிக்காவின் ஆயுதங்கள், போர் கப்பல்கள் வந்தன. ஆனால் இந்திரா காந்தி பயப்படவில்லை. நான் செய்ய வேண்டியதை செய்து முடிப்பேன் என்று வெற்றி பெற்றார். இதுதான் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கும் வித்தியாசம். சுதந்திரத்துக்கு பின்னால் அவர்கள் (பாஜக) சரண்டர் கடிதம் எழுதி வருகின்றனர். ஆனால் காந்தி, நேரு, சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்டவர்கள் ஒருபோதும் சரணடைந்தது இல்லை. அவர்கள் சூப்பர் பவருடன் எதிர்த்து போராடினார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டிரம்பை யாரு பஞ்சாயத்து பண்ண கூப்பிட்டது? இந்தியா - பாக். போர் விவகாரத்தில் ராகுல் கேள்வி!!