ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதில் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதால் அதை தடுப்பதற்காக இஸ்ரேல் வான்வழி தாக்குதலை தொடங்கியது. ஈரானின் முக்கிய அணு நிலையங்கள் மீது குண்டு வீசப்பட்டதில் முக்கிய அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது ட்ரோன்கள், ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதற்கிடையில், இஸ்ரேலுக்கு மறைமுகமாக உதவி வரும் அமெரிக்கா, ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தலை ஏற்க ஈரான் மறுப்பு கூறிவிட்டது. முக்கியத்துவம் வாய்ந்த ஜி7 மாநாட்டை விட டிரம்ப் இஸ்ரேல் - ஈரான் போரில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறார். அமெரிக்கப் போர்க் கப்பல்கள், விமானங்கள் ஐரோப்பாவை நோக்கி நகரத் தொடங்கியிருப்பது இந்தப் போர் இன்னும் விரிவடையக்கூடும் என்கிற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: சீனாவுக்கு டார்க்கெட்! பாக்.உடன் உறவு கொண்டாடும் அமெரிக்கா.. வேடிக்கை பார்க்கும் இந்தியா..!

இந்த நிலையில், இஸ்ரேலின் முக்கிய மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. 7வது நாளாக 2 நாடுகளும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தெற்கு இஸ்ரேலின் பீர்ஷெபாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை மீது ஈரான் நேரடித் தாக்குதல் நடத்தியிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்தது. இதனால் இஸ்ரேல் கடும் கோபத்தில் உள்ளது.

இதை தொடர்ந்து, அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியை இனியும் உயிரோடு விட்டு வைக்க மாட்டோம் என இஸ்ரேல் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. ஈரான் நாட்டின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமெனியை கொல்வது மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு; வெடித்த போராட்டங்கள்… டெக்சாஸில் உச்சக்கட்ட பதற்றம்!!