காவிரி நதிநீர் உரிமையை மீட்பதில் துளியும் ஆர்வம் காட்டாத தவெக அரசு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்வதில் மட்டும் காட்டும் அசுர வேகம் ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நீர் உரிமைப் போராட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சில கருத்துகள் முற்றிலும் தேவையற்றவை என்றும், கண்ணியக் குறைவானவை என்றும் சாடியுள்ள சீமான், எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருப்பவர் பொது மேடைகளில் 'எள்ளல் நடையில்' பேசுவதையும், ஆபாசச் சாயல் கொண்ட கருத்துகளை உதிர்ப்பதையும் தவிர்த்திருக்க வேண்டும் எனக் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பழிவாங்கும் அரசியலுக்காக எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு இறங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நதிநீர்ச் சிக்கலில் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சித் தலைவரின் கைதில் மட்டும் ஆளுங்கட்சி காட்டுவது எதற்காக என்ற வினாவை அவர் எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் சூடுபிடித்த காவிரி விவகாரம்..!! கர்நாடகாவில் 'ஜனநாயகன்' போஸ்டர் கிழிப்பு..!!
மாநில உரிமைகளுக்காகவும், காவிரி நீர் உரிமைக்காகவும் அனைத்துக் கட்சிகளும் இணைந்து குரல் கொடுக்க வேண்டிய இக்கட்டான காலகட்டத்தில், தவெக அரசு காட்டும் இந்த அதிகார அராஜகப்போக்கு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்றும், இத்தகைய அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை விடுத்து மக்கள் நலனில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் சீமான் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: சிந்தனை இவ்வளவு அழுக்காக இருந்தால் திமுகவுக்கு நல்லதல்ல! தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!