நாட்டின் பல்வேறு வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கு, அந்தந்த வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு வட்டி செலுத்துகின்றன. இந்த வட்டி விகிதம் தான் ரெப்போ என்று அழைக்கப்படுகிறது. இதனிடையே ரிசர்வ் வங்கி, நாட்டின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றியமைப்பது வழக்கம்.

இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு கூட்டம் ஜூன் 4ஆம் தேதி தொடங்கியது. இக்கூட்டத்தின் கடைசி நாளான இன்று (ஜூன் 6) ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். அதாவது வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்து, அது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
இதையும் படிங்க: 98.26% திரும்ப பெறப்பட்ட ரூ.2000 நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

இந்த ஆண்டில் மட்டும் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை இரண்டு முறை குறைத்துவிட்டது. முதலில் 2025 பிப்ரவரி மாதம் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்த ரிசர்வ் வங்கி, பின்னர் ஏப்ரல் மாதத்தில் 0.25 சதவீதமும் குறைத்தது. இதன் காரணமாக ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதத்திலிருந்து 6.00 சதவீதத்துக்கு வந்தது. தற்போது 3வது முறையான வட்டி குறைப்பால் 6 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி, 5.50 சதவீதமாக குறைந்துள்ளது. வழக்கமாக 0.25 சதவீதம் குறைக்கப்படும் நிலையில், இம்முறை 0.50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி, ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களைச் சேர்த்து ரெப்போ வட்டி விகிதம் 1% குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி குறைப்பு மூலம் வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி குறையும் என்றும் இது தொடர்பான அறிவிப்பை வங்கிகள் விரைவில் வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆர்பிஐ வெளியிட்ட நகைக்கடனுக்கான ரூல்ஸ்.. முழுமையாக ரத்து செய்க.. ஓ.பி.எஸ் வலியுறுத்தல்..!