முறைப்படி வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, போதிய மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிட நியமனம் என்பது உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதாக சீமான் தெரிவித்தார். உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசு, குறைந்தபட்சம் கொரோனா தொற்றுப் பணியின்போது உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியைக்கூடச் செய்ய மறுப்பதாக கண்டனம் தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்றுக் காலம் முதல் தற்போதைய டெங்கு தொற்றுக் காலம் வரை தம் உயிரைப் பொருட்படுத்தாது, மக்கள் உயிர் காக்க முன்கள வீரர்களாக முனைப்புடன் கடமையாற்றி வருபவர்கள் அரசு மருத்துவர்கள். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் விரைந்து கட்டுக்குள் வர அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்புமிக்க கடின உழைப்பே முதன்மையான காரணம் என்றும் தமிழ்நாட்டின் 18000 அரசு மருத்துவர்கள்தான் கோடிக்கணக்கான ஏழை-எளிய தமிழக மக்களின் நல்வாழ்விற்கு ஆணிவேராக உள்ளதாகவும் சீமான் கூறினார்.
இதையும் படிங்க: மக்கள் ரத்தத்தை குடிக்கும் திமுக ஆட்சி.. கொங்கு மண்டலமே சாட்சி! போட்டு விளாசிய சீமான்..!

ஆனால், ஆடம்பரத் திட்டங்களுக்காகப் பல்லாயிரம் கோடிகளைச் செலவழிக்கும் திமுக அரசு, 12 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவர்கள் வீதியில் இறங்கிப் போராடியும், அவர்களது அடிப்படை உரிமைகளைக் கூட இன்றுவரை நிறைவேற்றாமல் அலட்சியம் செய்வது கொடுங்கோன்மை என்றும் கொரோனோ பெருந்தொற்றுப் பணியின்போது உயிரிழந்த 11 அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியும், அரசுப்பணியும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சிறிதும் மனச்சான்று இன்றி திமுக அரசு ஏற்கமறுப்பது அதைவிடவும் பெருங்கொடுமை என்றும் குற்றம் சாட்டினார்.

கள்ளச்சாராயம் குடித்துச் செத்தால் 10 லட்சம் கொடுக்கும் திமுக அரசு, உயிரைக் காப்பாற்றும் அரசு மருத்துவர் பணியின் போது ஏற்பட்ட கொரோனா தொற்றால் உயிரிழந்தால் அவரது குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைப்பதுதான் சமூக நீதியா? என கேள்வி எழுப்பினார். எனவே, கொரோனோ பெருந்தொற்று பணியின் போது உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்க வேண்டும், முறைப்படி வழங்க வேண்டிய உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும், போதிய மருத்துவர் - செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நாளை சேலம் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அரசு மருத்துவர் பெருமக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தோள்கொடுத்து துணைநிற்கும் என்றும் சீமான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இருந்தும் பிரயோஜனம் இல்ல.. காலம் தாழ்த்தும் திமுக அரசை வறுத்தெடுக்கும் சீமான்..! எதுல தெரியுமா?