மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படம் ரிலீஸாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கர்நாடகாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல், தமிழில் இருந்து தான் கன்னடம் வந்ததாக கூறினார். இது பெரும் சர்ச்சையாக மாறியது. கமலின் இந்த பேச்சுக்கு கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இந்நிலையில், தக் லைப் பட பேனர்கள் கர்நாடகாவில் கிழிக்கப்பட்டுள்ளன. மேலும், இதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில் வரலாறு தெரிந்தால் எதிர்க்க மாட்டார்கள் என கமல் சர்ச்சையை சுட்டிக்காட்டி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உண்மையை உணராத கூட்டம்; வரலாறு தெரிந்தால் எதிர்க்க மாட்டார்கள்; அண்ணன் கமல்ஹாசன் சொன்னது உண்மை. தமிழிலிருந்து கன்னடம் உருவானது. கமல்ஹாசன் பேசியது உண்மை, சத்தியம் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவரிடம் செய்தியாளர் ஒருவர், தவெக, உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் தான் திமுக-வை வீழ்த்த முடியும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரே? என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: பொள்ளாட்சி வழக்கு; பெண்கள் வணங்கி போற்றத்தக்கவர்கள்... பாராட்டி தள்ளிய கமல்ஹாசன்!!

அதற்கு பதிலளித்த சீமான், அவ்வளவு பெரிய எதிரியாக நான் பார்க்கவில்லை. திமுக, அவ்வளவு பெரிய எதிரி அல்ல. திமுக-வின் ஓட்டு 12 சதவீதம் தான். எல்லா கூட்டணிகளையும் சேர்த்து கொண்டு, பாஜக-வின் பூச்சாண்டியை காட்டி, கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் 18 சதவீத ஓட்டுகளை பெறுகிறது. பாஜக-வுக்கு எதிராக, இந்தியா, பாகிஸ்தான் போல பகை உணர்வை திமுக, உருவாக்கி வைத்து இருக்கிறது. அவ்வளவு பெரிய வீழ்த்த முடியாத எதிரி அல்ல திமுக. எல்லாரும் சேர்ந்து தான் வீழ்த்த முடியும் என்ற அளவுக்கு கொம்பன் அல்ல என்றார்.

மேலும் அவரிடம் கச்சத்தீவை மீட்க தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியது குறித்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், தீர்மானத்தை தீயை வைத்து கொளுத்துங்கள். கொடுக்கும் போது என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்றால் பேச்சு கிடையாது. கச்சதீவை பறி கொடுக்கும் போது பார்லிமென்டில் எதிர்த்து பேசி வாதிட்டது யார்? சும்மா ஏதாவது பேசி கொண்டு இருக்காதீர்கள். தீர்மானம் போட்டு இருக்கிறதா? அது வெற்று தீர்மானம். இது எத்தனையாவது தீர்மானம் என்று முதலில் சொல்லுங்கள். இது பயன் அற்றது என்று காட்டமாக பதிலளித்தார்.
இதையும் படிங்க: "ஜெய்பீம்" என எழுதியதால் டிஸ்மிஸ்... மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீமான்!