தமிழ்நாட்டில் உள்ள 68 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், வானகரம், கிருஷ்ணகிரி, மதுரை, நான்குநேரி, வாணியம்பாடி, விராலிமலை, கப்பலூர், கனியூர், ஆத்தூர், தேனி உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. சுமார்3 முதல் 5 சதவிகிதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதால், கார்களுக்கான கட்டணம் ரூ.5 வரையும், கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ. 100 வரையும் உயர வாய்ப்புள்ளது.
இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிக்கும் அபாயம் எழுந்திருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இதனால் கிராமப்புற சாலைகளில் நெரிசல் அதிகரிப்பு, சாலை சேதம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. தனியார் பேருந்துகள், சுற்றுலாப் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் நீண்ட தூரம் பயணிக்கும் போது பல சுங்கச்சாவடிகளைக் கடக்க வேண்டியிருப்பதால், தினமும் இயக்கச் செலவில் சுங்கச் சாவடி கட்டணம் பெரும் சுமையாக உள்ளது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

வளைகுடா போரினால் உலகெங்கும் எரிபொருள், சமையல் எரிவாயு கிடைக்காமல் தொழில்துறை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் எரிபொருள், சுங்கக் கட்டண உயர்வின் விளைவாக சரக்குப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் உயர்ந்து, அந்த விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களின் தலையில் ஏற்றப்படுவதை ஒன்றிய அரசு உணர வேண்டும் எனவும் செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’: எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!! செல்வப்பெருந்தகை வாழ்த்து..!!
சாலைகளில் தரமற்ற பணிகள், பராமரிப்பு குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்ய மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் செலுத்திய கட்டணத்திற்கே உரிய வசதி கிடைக்காமல் இருக்கும் நிலையில், கட்டணத்தை மேலும் உயர்த்துவது நேரடியாக மக்களை சுரண்டும் செயல் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுபோன்று நெடுஞ்சாலைத் துறையில் முறைப்படுத்த வேண்டிய பல பணிகள் இருக்கின்றன என்றும் அவற்றைச் செய்யாமல் ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை மட்டும் உயர்த்திக்கொண்டிருப்பது மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கையே காட்டுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சுங்கச்சாவடி கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து மக்கள், போக்குவரத்து துறைக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வப் பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: வன்முறை தீர்வா? MP அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு… செல்வப் பெருந்தகை கண்டனம்..!!