இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் புதிய மைல்கல்லாக கருதப்படும் 'விக்ரம்-1' ராக்கெட்டின் வெற்றிகரமான ஏவுதலுக்குப் பிறகு, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் அடுத்த கட்ட இலக்கை அறிவித்துள்ளது. 2027-ம் ஆண்டு முதல் மாதத்திற்கு ஒரு 'விக்ரம்-1' ராக்கெட்டை தயாரித்து ஏவக்கூடிய உற்பத்தித் திறனை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவன்குமார் சந்தானா தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், தனியார் நிறுவனம் உருவாக்கிய ராக்கெட்டை வெற்றிகரமாக விண்வெளி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய உலகின் முக்கிய நாடுகளின் வரிசையில் இந்தியா இடம்பெற்றுள்ளது. மேலும், இந்திய தனியார் விண்வெளி நிறுவனங்களின் தொழில்நுட்ப திறனை உலக அரங்கில் நிரூபித்த சாதனையாகவும் இது பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பவன்குமார் சந்தானா கூறுகையில், “ராக்கெட் ஏவுதலுக்கான தேவை தற்போது அதிகமாக இருக்கிறது. அரசின் திட்டங்கள் நிறுவனத்திற்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கக்கூடும். இந்தியாவின் செயற்கைக்கோள் கூட்டமைப்புத் திட்டங்கள் (Satellite Constellation Plans) உள்நாட்டு ஏவுதலை கணிசமாக அதிகரிக்க வழி வகுக்கும். முதலில் நாங்கள் தரவுகளிலிருந்து கற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் மேம்பாடுகளைச் செய்து, மேலும் பல விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: இந்திய விண்வெளித் துறையில் புதிய சகாப்தம்! இளைஞர்களின் கனவை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் விக்ரம்-1!

வரும் 2027-ம் ஆண்டு முதல் மாதத்திற்கு ஒரு ‘விக்ரம்-1’ ராக்கெட்டை ஏவும் வகையிலான உற்பத்தித் திறனை எட்டுவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். முதல் ஏவுதலைப் பொறுத்தவரை, ராக்கெட் புறப்பட்டு ஏவுதளத்தைக் கடந்து செல்வதே முதன்மையான நோக்கமாக இருந்தது. ஆனால் நாங்கள் சுற்றுப்பாதை வரை சென்று செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தினோம்.
எனவே, இது 100 சதவீதம் வெற்றிகரமான பயணம் என்று நான் கருதுகிறேன். இதன் தாக்கம் பரவலாக உணரப்படுகிறது. விக்ரம்-1ன் வெற்றி இந்திய நிறுவனங்களின் திறனை வெளிப்படுத்துகிறது. பல்வேறு சவால்களைக் கடந்து, சுற்றுப்பாதையை அடையும் திறனை ஒரு இந்திய நிறுவனத்தால் பெற முடியும் என்பதை இது காட்டுகிறது” என்றார்.
சிறிய மற்றும் நடுத்தர செயற்கைக்கோள்களை குறைந்த செலவில் விண்ணில் செலுத்தும் சந்தை உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஸ்கைரூட்டின் இந்த இலக்கு இந்திய விண்வெளித் துறைக்கு புதிய முதலீடுகளையும், தொழில்நுட்ப வளர்ச்சியையும் கொண்டு வரும் என நிபுணர்கள் கருதுகின்றனர். அரசின் விண்வெளி சீர்திருத்தங்களும், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளும் இந்தியாவை உலக விண்வெளி சந்தையில் முக்கிய இடத்திற்கு கொண்டு செல்லும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!