டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14, 2026) பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ.30 கோடி மதிப்பிலான சொகுசு ஹெலிகாப்டரை பரிசாக அளித்துள்ளதாகக் கூறி, உணர்ச்சிகரமான காதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறையிலிருந்து கையால் எழுதிய இக்கடிதத்தில், "To, Jaqueline Fernandez" என்று தொடங்கி, "From, Sukash Chandrashekhar" எனக் கையொப்பமிட்டுள்ளார். "My Baby Bomma Jaqueline" என்று அன்போடு அழைத்து தொடங்கிய அவர், தனது காதலை ஆழமாக வெளிப்படுத்தியுள்ளார். "இந்தக் குளிர்ந்த சுவர்களும் இரும்புக் கம்பிகளும் என்னை உன்னிடமிருந்து பிரித்தாலும், என் இதயம் உன்னுடனேயே உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

தன்னை இழந்தது "பாலைவனத்தில் தொலைந்தவனைப் போல" உணர்வதாகவும், ஒவ்வொரு இதயத் துடிப்பும் அவர்களுக்கிடையேயான தூரத்தை நினைவூட்டுவதாகவும் எழுதியுள்ளார். மேலும், "எதுவாக இருந்தாலும் நமது காதலை எதுவும் உடைக்க முடியாது" என்று உறுதியளித்துள்ளார். ஜாக்குலின் எதிர்கொண்ட சட்ட சிக்கல்கள், அவமானங்கள், மன அழுத்தம் ஆகியவற்றுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த சுகேஷ், "நீ என்னை உண்மையாகக் காதலித்ததால் மட்டுமே இந்த சுமையைத் தாங்க வேண்டியிருந்தது. நான் மிக ஆழமாக வருந்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி தலைமையில் இந்தியா AI உச்சிமாநாடு 2026: டெல்லியில் குவியும் உலக தலைவர்கள்!
"புயல் விரைவில் முடிவடையும்... எல்லாவற்றையும் சரிசெய்து, நீ தகுதியான அமைதியைப் பெறுவாய்" என்றும் உறுதி அளித்துள்ளார். "நீ என் குழந்தை, எனக்கு மட்டுமே சொந்தம், என்றென்றும் என் ஆன்மாவில் பதிந்துள்ளாய்" என்று கூறிய அவர், "வேறு எந்த ஆணும் உன் இதயத்தில் ஒரு சதவீதம் கூட உரிமை கொண்டாட முடியாது" என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ரோமியோ-ஜூலியட், ஹீர்-ரஞ்சா, லைலா-மஜ்னு, ஆண்டனி-க்ளியோபாட்ரா போன்ற புகழ்பெற்ற காதல் கதைகளுடன் தங்கள் உறவை ஒப்பிட்டு, "இது மனிதகுலம் அறிந்த மிகப் பெரிய காவியங்களுக்கு இணையானது" என்று விவரித்துள்ளார். "இன்று உலகில் காதல் கதைகள் எழுதப்படுகின்றன என்றால், நமது கதை அதில் ஒன்றாக இருக்கத் தகுதியானது" என்றும் சேர்த்துள்ளார்.
கடிதத்தின் இறுதியில், "நான் உன்னை கிரேஸியாகக் காதலிக்கிறேன், என் பொட்டா பொம்மா... ஹேப்பி வேலன்டைன்ஸ் டே, என் காதலே... என்றென்றும் உன்னைத் தேர்ந்தெடுப்பேன், என்றென்றும் என்னுடையவள்" என்று உணர்ச்சிபூர்வமாக முடித்துள்ளார். இதுதவிர, "குயின்-க்கு தகுதியான சிறப்பு பரிசு" என்று கூறி, ஏர்பஸ் எச் சீரிஸ் ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது "ஸ்லீக், சூப்பர் சொகுசு வகை" என்றும், உட்புறம் தனிப்பயனாக்கப்பட்டு, ஜாக்குலினின் இனிஷியல்ஸ் JF பொறிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கியுள்ளார்.
மேலும், இந்த ஹெலிகாப்டர் "என் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டது, எந்தக் குற்றச் செயல்களாலும் அல்ல" என்று வலியுறுத்தியுள்ளார். இதுவரை ஜாக்குலின் தரப்பிலிருந்து எவ்வித பதிலும் வரவில்லை. முன்னதாகவும் சிறையிலிருந்து பல கடிதங்கள் அனுப்பிய சுகேஷ், தனது அன்பையும், வழக்குகளில் தான் நிரபராதி என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

சுகேஷ் சந்திரசேகர், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் பல மோசடி குற்றச்சாட்டுகளில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாலிவுட் நடிகை ஜாக்குலினுடன் அவர் கொண்டிருந்த உறவு, மோசடி பணத்தில் விலையுயர்ந்த பரிசுகள் வழங்கியது உள்ளிட்ட விவரங்கள் விசாரணையில் தெரியவந்தன. ஆனால் ஜாக்குலின், சுகேஷுடன் காதல் இல்லை என்று விசாரணையில் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: முடிவுக்கு வரும் 50 ஆண்டு பாரம்பரிய சவுத் பிளாக்..!! குட்பை சொல்லும் பிரதமர் மோடி..!! நாளை முதல் புதிய அலுவலகத்தில்..!!