இளநிலை நீட் நுழைவுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது OMR விடைத்தாளில் குறித்த பதில்களுக்கும், தேசிய தேர்வு முகமை (NTA) இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட OMR நகலுக்கும் இடையே பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தேர்வின் போது OMR பதில்தாளில் நாங்கள் குறித்த பதில்கள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் எங்கள் மதிப்பெண்களும், தரவரிசையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வரும் சூழலில், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் அவசரமாகத் தலையிட்டு உரிய நீதி வழங்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் காரசாரமாக வாதிட்டார்.

இந்த மனு நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அராதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய தேர்வு முகமை (NTA) சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தில், மாணவர்களின் OMR பதில்தாள்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் இருமுறை ஸ்கேன் செய்யப்பட்டுத் துல்லியமாக சரிபார்க்கப்பட்டுள்ளன. இதில் எந்தவிதமான முரண்பாடுகளோ அல்லது முறைகேடுகளோ நடக்க வாய்ப்பில்லை. மாணவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எவ்விதமான தகுந்த ஆதாரங்களும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போராடும் இளைஞர்களை அச்சுறுத்த கூடாது! நீட் வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!
இரு தரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டறிந்த நீதிபதிகள் அமர்வு, தேசிய தேர்வு முகமையின் OMR விடைத்தாள் பதிவேற்றத்தில் முறைகேடு நடந்துள்ளது என்பதையும், பதில்கள் மாற்றப்பட்டுள்ளன என்பதையும் நிரூபிக்க மாணவர்கள் தரப்பில் போதுமான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினர். இதன் காரணமாக, 6 மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை ஏற்க மறுத்து, வழக்கை முற்றிலும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!