சென்னை: தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு கடந்த மே 10-ம் தேதி பதவியேற்றது. முதல்வர் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பொறுப்பேற்ற நிலையில், சனிக்கிழமை (மே 16) அவர்களுக்கு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இன்னும் பல முக்கியத் துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் அமைச்சரவை விரிவாக்கம் எப்போது என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக நிதியமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். “பொதுவாக அமைச்சரவை விரிவாக்கம் படிப்படியாகத்தான் நடைபெறும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலில் 7 பேரை மட்டுமே அமைச்சர்களாக நியமித்தார். எனவே அவசரப்பட வேண்டியதில்லை. எப்படி இயக்குவது என்பதை முதல்வர் விஜய்தான் முடிவு செய்வார்” என்று அவர் தெரிவித்தார்.
நிதி நெருக்கடி குறித்த கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், “நிதி நெருக்கடியை சமாளிக்கும் திறமை முதல்வர் விஜய்யிடம் உள்ளது. பொருளாதார நிலை குறித்து படிப்படியாக ஆய்வு செய்த பிறகு தெளிவான விளக்கம் அளிக்க முடியும்” என்றார்.
இதையும் படிங்க: அமைச்சர்கள் நியமிக்கப்படாத முக்கிய இலாகா! யாருக்காக காத்திருக்கிறார் முதல்வர் விஜய்!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் செங்கோட்டையன் விமர்சனம் செய்தார். “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி வலுவிழக்கச் செய்துவிட்டார். தான் மட்டும் ஒருவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் உள்ளது” என்று அவர் கூறினார்.
தற்போது முதல்வர் விஜய் உள்பட 10 பேரே அமைச்சரவையில் உள்ளனர். அரசியலமைப்பு விதிப்படி அதிகபட்சம் 35 அமைச்சர்கள் வரை நியமிக்கலாம். எனவே இன்னும் 25 பேருக்கு வாய்ப்பு உள்ளது. கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் நடைபெறும் என த.வெ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் விஜய் தலைமையிலான அரசு மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் என்ற நம்பிக்கையும் வலுத்துள்ளது. படிப்படியான அணுகுமுறை மூலம் அரசு இயந்திரத்தை சிறப்பாக இயக்க முதல்வர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்க தாமதிக்கும் முதல்வர் விஜய்! 3,000 கோப்புகள் தேக்கம்!