டெல்லி: நீட் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க டெலிகிராம் செயலியை தற்காலிகமாக முடக்கிய மத்திய அரசின் நடவடிக்கைக்கு வலுவான ஆதரவு அளித்துள்ள மத்திய அரசு, டெலிகிராம் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 3ஆம் தேதி நடைபெற்றது. வினாத்தாள் கசிவு புகாரைத் தொடர்ந்து வரும் 21ஆம் தேதி மறுதேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், டெலிகிராம் செயலியில் மறுதேர்வு வினாத்தாள் விற்பனை செய்யப்படுவதாக வதந்தி பரவியது. இதைத் தடுக்க வரும் 22ஆம் தேதி வரை டெலிகிராம் செயலியை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விரிவான அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: டெலிகிராம் மீதான தடை! சரிதான்!! டெல்லி ஹைகோர்ட் திட்டவட்டம்! மத்திய அரசின் முடிவுக்கு க்ரீன் சிக்னல்!

மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: “டெலிகிராம் செயலி பயங்கரவாதம், இணையக் குற்றங்கள், நிதி மோசடி, போதைப்பொருள் கடத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோதச் செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இது புதிய வகை ‘டார்க் வெப்’ போல் செயல்படுகிறது. ஆபாசப் படங்கள், குழந்தை சித்திரவதை உள்ளடக்கங்கள் பெருமளவில் பகிரப்படுகின்றன. திரைப்படங்கள் மற்றும் பதிப்புரிமை உள்ளடக்கங்கள் ஆயிரக்கணக்கான சேனல்கள் மூலம் இலவசமாகப் பகிரப்படுவதால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஒரு சேனலில் உள்ள லட்சக்கணக்கான பயனர்களை சில வினாடிகளில் மற்றொரு சேனலுக்கு மாற்றும் வசதி தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் எனவும், குற்றவாளிகளைப் பற்றிய தகவல்களைக் கோரினால் ஒத்துழைப்பு தராத நிலை உள்ளதாகவும் அரசு சுட்டிக்காட்டியது.
நீதிபதி தேஜஸ் காரியா, “15 கோடி பயனர்களின் உரிமைகளை எப்படி பாதிக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினாலும், மத்திய அரசின் விரிவான அறிக்கையை பதிவு செய்த நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
நீட் போன்ற முக்கியத் தேர்வுகளின் நேர்மையைப் பாதுகாக்க இந்த வழக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராம் செயலிக்கு தடை விதிப்பது ஏன்?! மாணவர்கள், ஐ.டி மக்கள் கோவம்!