திருச்சூர் பூரம் நிகழ்ச்சிக்காக பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் முண்டாத்திக்கோடு என்ற இடத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த திருவாம்பாடி பிரிவின் மாதிரி வாணவேடிக்கைக்காக பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் சுமார் 40 பேர் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், அந்த ஒலி பல கிலோமீட்டர் தூரம் வரை கேட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த பயங்கர விபத்தில் 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பாலக்காடு மற்றும் எர்ணாகுளம் மருத்துவமனைகளில் இருந்து கூடுதல் மருத்துவர்கள்
வரவழைக்கப்பட்டுள்ளனர். இதில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
வெடிப்புக்கான சரியான காரணத்தை அதிகாரிகள் இன்னும் கண்டறியவில்லை. ஆரம்பகட்ட ஆய்வுகளின்படி, பட்டாசு இரசாயனங்களைக் கலக்கும்போது இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. மிக முக்கியமாக அறுவடைக்குப் பிறகு காய்ந்திருந்த ஒரு நெல் வயலில் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றதும், கடுமையான கோடை வெப்பம் காரணமாக விபத்து நேர்ந்திருக்கலாம் என்றும் போலீசார் முதற்கட்டமாக தெரிவித்துள்ளனர்.பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை மதிப்பிடுவதற்காக, அந்த இடத்தில் ஒரு விரிவான தீ தணிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: “ஈரானுடனான போரை நிறுத்துறோம்... ஆனால் அதை மட்டும் நிறுத்த மாட்டோம்...” - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு...!
சம்பவ இடத்திலிருந்து ஏழு முழுமையான உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், கூடுதலாக ஒன்பது உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டன. பழையனூரைச் சேர்ந்த சுதர்சனன் (54); பாலக்காடு மாவட்டம், கல்லூரைச் சேர்ந்த வாசுதேவன் (54); மற்றும் குண்டன்னூரைச் சேர்ந்த சுவின் (40) ஆகியோரது உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ள நான்கு பேரை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பட்டாசு ஆலை வெடிவிபத்து சம்பவத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி இரங்கல் தெருவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் நிவாரணமும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் நெஞ்சை பிளக்கும் வகையில் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ள ராகுல் காந்தி மீட்பு பணிகளை துரிதப்படுத்தி, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: நேருக்கு நேர் மோதிய கார் - பேருந்து! - கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன 3 உயிர்... நடந்தது என்ன?