உத்தரபிரதேச மாநிலத்தில் கனமழையால் நூறு ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்ததில், இரண்டு பச்சிளம் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
பிரதாப்கர் மாவட்டத்தில் அதிகாலை நேரத்தில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தபோது, பழமையான வீட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது வீட்டின் ஒரே அறையில் குடும்பத்தினர் ஏழு பேர் தூங்கிக் கொண்டிருந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்பு முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்து போலீசார் மற்றும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியை தீவிரப்படுத்தினர்.
நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டபோது, ஆறு பேர் உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதையும் படிங்க: 8 மாத கர்ப்பிணி மனைவியை வெட்டிக்கொன்று நாடகமாடிய குழந்தையின் சாட்சியால் வெளியான அதிர்ச்சி சம்பவம்!

உயிரிழந்தவர்கள் பிரமோத் ஸ்ரீவஸ்தவா (60), அவரது மனைவி ரீட்டா (55), அவர்களது மகன் நிதின் (25), மூத்த மகன் அமனின் மனைவி மாதுரி (24), மேலும் அமனின் இரண்டு மகன்களான 2 வயது மாதவ் மற்றும் 10 மாதக் குழந்தை அத்விக் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதாப்கர் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம் மிகுந்த வேதனையை அளிப்பதாக கூறிய அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்த நபர் விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பழமையான கட்டிடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆற்றில் குளித்த சிறுவனை இழுத்துச் சென்ற முதலை! உறவினர் கண் முன்னே நடந்த சோகம்...