மேற்கு வங்கத்தில் டெங்கு மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி மாணவர்களை கொசுக்கடியிலிருந்து பாதுகாக்க புதிய நடவடிக்கை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சரத்வத் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்படி, அடுத்த மூன்று மாதங்களுக்கு மாணவர்கள் உடலை முடிந்தவரை மூடும் வகையிலான ஆடைகளை அணிய பள்ளிகள் அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழைக்காலம் முடிந்த பிறகும் பல பகுதிகளில் கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து வருவதால், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஸ்வஸ்த்ய பவன் தலைமையகத்தில் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் சரத்வத் முகர்ஜி, மாணவர்கள் பள்ளியில் இருக்கும் நேரத்தில் கொசுக்கடிக்கு ஆளாகாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளிகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். குறிப்பாக, அடுத்த மூன்று மாதங்களுக்கு மாணவர்கள் முழுக்கை சட்டைகள் மற்றும் முழு நீள பேண்ட் அணிய பள்ளி நிர்வாகங்கள் அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மம்தா எடுத்துச் சென்ற புத்தகங்கள் எங்கே? ‘செக்’ வைத்த பாஜக! தாகூர் நூல்கள் விவகாரத்தில் வெடித்த சர்ச்சை!

வழக்கமாக பாவாடை அல்லது ஸ்கர்ட் சீருடை அணியும் மாணவிகளுக்கும் தற்காலிகமாக மாற்று ஆடை அணிய அனுமதி வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கால்களை முழுமையாக மூடும் வகையில் சல்வார் கமீஸ் அல்லது சுடிதார் போன்ற ஆடைகளை அணிய அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதே இந்த வேண்டுகோளின் முக்கிய அம்சமாகும்.
டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் பொதுவாக பகல் நேரத்திலும் மனிதர்களை கடிக்கும் என்பதால், பள்ளி நேரத்தில் மாணவர்களின் கை, கால்கள் மூடப்பட்டிருப்பது கொசுக்கடியை குறைக்க உதவும் என சுகாதாரத் துறை கருதுகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இந்த தற்காலிக மாற்றத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு பரவலை கட்டுப்படுத்த கொசு உற்பத்தியாகும் இடங்களை அழிப்பது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுடன், மாணவர்களின் உடை தொடர்பான இந்த முன்னெச்சரிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையும் படிங்க: ஹோட்டலில் அதிகாலை பயங்கர தீ விபத்து: 7 பேர் உடல் கருகி பலி! தப்பிக்க முடியாமல் சிக்கிய மக்கள்!