மேற்கு வங்கத்தின் அரசியல் வரலாறு என்பது எப்போதும் ஒரு ஆதிக்கத்தில் இருந்து மற்றொரு ஆதிக்கத்திற்கு மாறும் சுவாரசியமான போக்கைக் கொண்டது. சுதந்திரத்திற்குப் பிறகு தொடக்கத்தில் காங்கிரஸ் கோலோச்சிய நிலையில், 1977 முதல் 2011 வரை சுமார் 33 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அசைக்க முடியாத சாம்ராஜ்யம் நீடித்தது. அந்தச் சாம்ராஜ்யத்தை 2011-ல் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிரடியாகத் தகர்த்து ஆட்சியைப் பிடித்தது.
2016 மற்றும் 2021 தேர்தல்களிலும் அடுத்தடுத்து வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்த மம்தா பானர்ஜி, தற்போது நான்காவது முறையாக முதலமைச்சர் அரியணையில் அமரும் முனைப்புடன் தேர்தலைச் சந்தித்துள்ளார். ஆனால், இந்த முறை அவருக்குப் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. 2026 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், வங்க மண்ணில் இதுவரை கண்டிராத ஒரு புதிய அரசியல் மாற்றம் நிகழப்போவதை அவை சுட்டிக்காட்டுகின்றன.
294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்க 148 இடங்கள் தேவை என்ற நிலையில், பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் பாஜக ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளன. குறிப்பாக P-MARQ நிறுவனம் பாஜகவிற்கு 150 முதல் 175 இடங்களையும், POLL DIARY 142 முதல் 171 இடங்களையும் வழங்கியுள்ளன. அதேபோல் Matrize மற்றும் Chanakya Strategies போன்ற நிறுவனங்களும் பாஜக 145 முதல் 160 இடங்கள் வரை பெற்று வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தும் எனக் கணித்துள்ளன. JVC நிறுவனத்தின் கணிப்பில் பாஜக மற்றும் திரிணாமுல் இடையே கடும் போட்டி நிலவினாலும், பாஜக 159 இடங்கள் வரை பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முடிவுகள் உண்மையானால், மேற்கு வங்கத்தில் முதல் முறையாகப் பாஜக ஆட்சி அமைக்கும் என்பதால் அக்கட்சியினரின் பல்ஸ் எகிறியுள்ளது.
இதையும் படிங்க: மேற்கு வங்கத் தேர்தல் நிறைவு: 2-ம் கட்டத்தில் 90% வாக்குப்பதிவு! மே 4-ல் வெளியாகிறது இறுதி முடிவு!

இருப்பினும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அவ்வளவு எளிதாகக் களத்தை விட்டுக்கொடுக்கவில்லை. People's Pulse நிறுவனத்தின் கணிப்பின்படி, திரிணாமுல் காங்கிரஸ் 178 முதல் 189 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் மம்தாவை அரியணையில் அமர்த்தும் எனக் கூறப்பட்டுள்ளது. மற்ற பெரும்பாலான கணிப்புகள் மம்தா பின்னடைவைச் சந்திப்பார் எனக் கூறினாலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இந்தக் கணிப்புகளைப் புறந்தள்ளிவிட்டு வெற்றியின் மீது நம்பிக்கையுடன் உள்ளனர். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தத் தேர்தலிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியுள்ளன. மம்தாவின் 15 ஆண்டுகால சாம்ராஜ்யம் தொடருமா அல்லது வங்கத்தில் முதல் முறையாகத் தாமரை மலருமா என்பது வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: EVM மிஷினில் டேப்..!! இது செல்லாது.. மீண்டும் வாக்குப்பதிவு நடத்த கோரும் பாஜக..!! மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!