சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படையினரால் 637 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற நிலையில், மார்ச் 15 முதல் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியவர்கள் மீது தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு நடத்தினர். இதில், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மட்டும் மொத்தம் 637 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 428 கோடி ரூபாய் அளவுக்கு ரொக்கம், தங்கம், வெள்ளி நகைகள், மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் 389 கோடி ரூபாய் மதிப்பிலான 453 கிலோ தங்கம்-வெள்ளி நகைகள் உள்ளிட்டவை அடங்கும். காஞ்சிபுரத்தில் 39.71 கோடி, திருவள்ளூரில் 92.09 கோடி, செங்கல்பட்டில் 77.12 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: வாக்குப்பதிவு முடிந்து 3 நாட்களாகியும் தேர்தல் ஆணையம் மெத்தனம்! ஓட்டுப்பதிவு விவரம் வெளியாவதில் தாமதம்!

மொத்தம் 45 கோடி ரொக்கம் உட்பட 637 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அரசு கருவூலங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு 93.52 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 500 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பணம் மற்றும் பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அவை வருமான வரித்துறை வசம் சென்றுள்ளன.
அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வாகனங்களில் இருந்து இந்தப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. பல இடங்களில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் மற்றும் பரிசுப் பொருட்களும் சிக்கியுள்ளன.
மாவட்ட தேர்தல் அலுவலர்கள் இதுகுறித்து கூறுகையில், “உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் விசாரணைக்குப் பிறகு உடனடியாக பொருட்கள் விடுவிக்கப்படுகின்றன. ஆனால் ஆவணங்கள் இல்லாத பணம் மற்றும் பொருட்களுக்கு உரிமை கோரப்படவில்லை. 10 லட்சத்துக்கு மேல் உள்ளவை வருமான வரித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கு வரி செலுத்தி உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே அவற்றை மீட்டெடுக்க முடியும்” என்று தெரிவித்தனர்.
இந்த பறிமுதல் நடவடிக்கை தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தியதன் விளைவு என்று கூறப்படுகிறது. எனினும், 500 கோடிக்கும் மேற்பட்ட பணம் வருமான வரித்துறை வசம் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருச்சி கிழக்கில் ஓட்டு போடாத முக்கிய வேட்பாளர்கள்?! திமுக, தவெக, அதிமுக என அனைத்து கட்சி நிதர்சனம்!