தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி உரையாற்றினார். அவரது உரை நீர்ப்பாசனம், விவசாயம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களை உள்ளடக்கியதாக அமைந்தது. குறிப்பாக பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அவரது உரையின் மையப்பகுதியாக இருந்தது.சௌமியா அன்புமணி தனது உரையில் அரசு அறிவித்த சேவை உரிமைச் சட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்தக் கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இது செயல்படுத்தப்பட்டால் பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், ரேஷன் அட்டை போன்றவை மக்களுக்கு எளிதாகக் கிடைக்கும் என்றார். அதேநேரம் வேளாண் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மிகக் குறைவு எனக் குற்றம் சாட்டினார். விவசாயிகளின் நலனுக்காக அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும், மூலதனச் செலவினங்களில் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் பெய்யும் மழைநீர் பெரும்பாலும் வீணாகக் கடலில் கலப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இதற்குத் தீர்வாக அனைத்து ஆறுகளிலும் ஒவ்வொரு பத்து கிலோமீட்டருக்கும் ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும் என்றார். காவிரி ஆறு சுமார் நானூற்று இருபது கிலோமீட்டர் ஓடுவதால் அதில் இருபத்தைந்து அல்லது முப்பது தடுப்பணைகள் அமைத்தாலே இருபது டிஎம்சி நீர் சேமிக்கப்படும் என்றும், பாலாறு உள்ளிட்ட முப்பத்தைந்து பெரிய ஆறுகளில் இத்தகைய தடுப்பணைகள் கட்டப்பட்டால் நூறு டிஎம்சி வரை நீர் தேக்க முடியும் என்றும் விளக்கினார்.
இதையும் படிங்க: பாமகவை குறிவைத்த தவெக.. முந்திக்கொண்ட திருமாவளவன்! கூட்டணி அரசியல் பின்னணி!
இதன் மூலம் கர்நாடகா, கேரளா அல்லது ஆந்திரா போன்ற மாநிலங்களிடம் தண்ணீருக்காகக் கையேந்த வேண்டிய அவசியம் இருக்காது என உறுதியாகத் தெரிவித்தார். தருமபுரி மாவட்டத்திற்கு இரண்டு டிஎம்சி நீரும், சேலம் மாவட்டத்திற்கு ஐந்து டிஎம்சி நீரும் போதுமானது என்றும், காவிரி தருமபுரி உபரி நீர் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் கோரினார்.மேலும் தமிழ்நாட்டில் முன்பு நாற்பத்திரண்டாயிரம் ஏரிகள் இருந்தன என்றும், தற்போது இருபத்தேழாயிரம் ஏரிகள் மட்டுமே உள்ளன என்றும் கூறிய அவர், இவற்றைத் தூர்வாரினால் நூற்றைம்பது டிஎம்சி நீர் தேக்க முடியும் எனக் கணக்கிட்டுக் காட்டினார்.
இதையும் படிங்க: சென்னை மீண்டும் வெள்ளத்தில் சிக்குமா? திருப்புகழ் ஆணையம்... சவுமியா அன்புமணி பேரவையில் உரை..!!