தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு அதிகமான தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றன. இதனால் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் பெரிய சிக்கல்கள் உருவாகியுள்ளன. மறுபுறம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளது. அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளின் பின்னணியில் உள்ள அரசியல் காரணங்களைப் பற்றியே இங்கு பார்க்கலாம்.
முதலில் தொகுதி பங்கீட்டை புரிந்து கொள்ள 2021 சட்டப்பேரவைத் தேர்தலை எடுத்துக் கொள்ள வேண்டும், அப்போது பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருந்தன. மொத்தம் 43 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்காக விடப்பட்ட நிலையில், மற்ற பெரும்பாலான தொகுதிகளில் இரட்டை இலைச் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் அதிமுக மட்டும் சுமார் 179 தொகுதிகளில் போட்டியிட்டது. தாமக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சில தொகுதிகளில் போட்டியிட்டன. மொத்தத்தில் சுமார் 190 தொகுதிகளில் இரட்டை இலைச் சின்னத்தில் வேட்பாளர்கள் இருந்தனர்.
ஆனால் இந்த முறை நிலைமை மாறியுள்ளது. கடந்த தேர்தலில் சுமார் 180 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, இந்த முறை சுமார் 160 தொகுதிகள் அளவுக்கு மட்டுமே போட்டியிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை கோருவது தான். கடந்த தேர்தலில் பாஜக மற்றும் பாமக மட்டும் கூட்டணியில் இருந்த நிலையில், இந்த முறை அமமுகவும் புதியதாக கூட்டணியில் இணைந்துள்ளது. இதனால் அதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெல்லமண்டி நடராஜனுக்கு புதிய பொறுப்பு... EPS எடுத்த அதிரடி முடிவு..!!
இதற்கிடையில், “எங்களுக்கு அதிக இடங்கள் வேண்டும்” என்று கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதிமுக தலைமையோ, “எல்லா கோரிக்கைகளையும் ஏற்க முடியாது; நாங்களே பார்த்து தொகுதிகளை ஒதுக்குவோம்” என்ற நிலைப்பாட்டில் உள்ளது. பாஜக கடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, இப்போது அதிக தொகுதிகளை கோருகிறது. இதன் காரணமாக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தனியாக போட்டியிட்டு சுமார் 11% வாக்குகளைப் பெற்றது. முன்பு 4% வாக்குகள் இருந்தபோது 20 தொகுதிகள் வழங்கப்பட்டது. இப்போது 11% வாக்குகள் கிடைத்த நிலையில் அதிக தொகுதிகள் வழங்க வேண்டும் என்று பாஜக வாதிடுகிறது.
மேலும், 2024 தேர்தலில் சுமார் 59 தொகுதிகளில் அதிமுகவை விட பாஜக இரண்டாம் இடம் பெற்றதாகவும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது. அதனால் குறைந்தபட்சம் 60 முதல் 70 தொகுதிகள் வரை போட்டியிட தகுதி உள்ளது என்றாலும், தற்போது 45 தொகுதிகள் என்ற கோரிக்கையை தான் முன்வைத்ததாகவும் பாஜக தரப்பு வலியுறுத்தியுள்ளது. அதிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்ட 25 தொகுதிகள் தங்களுக்கு கட்டாயம் வேண்டும் என்பதை எடப்பாடி பழனிசாமியிடம் கட் அண்ட் கறாராக சொல்லியிருக்காராம். ஆனால் இபிஎஸோ பாஜக மற்றும் அமமுக இரண்டு கட்சிகளுக்கும் சேர்ந்தே 30 தொகுதிகள் தான் ஒதுக்க முடியும் என்பதில் தெளிவாக உள்ளாராம். இதில் பாமகவுக்கு ஏற்கனவே 18 தொகுதிகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது .
பாஜக குறைந்த 35 தொகுதிகள் வேண்டும், கடைசியாக 30 தொகுதிகளையாவது கொடுத்தே ஆக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்களாம். மற்றொருபுறம் அமமுக தரப்பில் 2021ம் ஆண்டு தேர்தலின் போது நாங்கள் கூட்டணியில் இல்லாததால் அதிமுக பல இடங்களில் தோல்வி அடைந்ததாக சுட்டிக்காட்டி 20 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகிறார்கள்.
மேலும், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உட்பட சுமார் 10 முக்கிய நிர்வாகிகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டிய நிலையும் உள்ளது. இதில் ஜான் பாண்டியனுக்கு 3, புரட்சி பாரதம் ஜெகன் மூர்த்திக்கு 3, இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 6 என அதிமுக கூட்டணியின் கோரிக்கை பட்டியல் நீண்டு வருகிறது. இதனால் அதிமுக சுமார் 150 முதல் 160 தொகுதிகள் மட்டுமே போட்டியிடக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: பப்புவை நம்பி மக்கிப்போன காங்கிரஸ்.. வெட்கமே இல்லையா? அதிமுக விளாசல்..!!