சட்டமன்றப் பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளவர்கள் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் தங்கள் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வேண்டி ஏராளமான விருப்ப மனுக்களை அளித்துள்ளதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் வரும் ஜனவரி 9-ஆம் தேதி தலைமைக்கழகத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில், வேட்பாளர் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி யாராவது அணுகினால் அவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இந்த அறிக்கையில், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு ஒருசிலர் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். “கழகத்திற்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு உரிய நேரத்தில் முக்கியத்துவமும், அங்கீகாரமும் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ள அவர், தகுதியான நபர்களைக் கழக ஆட்சி மன்றக் குழுவே முறைப்படி தேர்ந்தெடுக்கும் எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: நான்கரை ஆண்டுகளில் ரூ. 4 லட்சம் கோடி ஊழல்… லிஸ்ட் போட்டு கொடுத்து இருக்கோம்… ஆளுநரை சந்தித்த இபிஎஸ் விளக்கம்…!
மேலும், நேர்காணலில் கலந்துகொள்பவர்கள் விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் நேரில் வர வேண்டும் என்றும், தனிநபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை பூர்த்தி செய்த மனுக்களை ஒப்படைக்காதவர்கள் உடனடியாகத் தலைமைக்கழகத்தில் அவற்றை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே அதிமுக தனது உள்கட்சித் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதால், ராயப்பேட்டையில் உள்ள ‘எம்.ஜி.ஆர். மாளிகை’ தற்போது பரபரப்பாகக் காட்சியளிக்கிறது.
இதையும் படிங்க: ADMK கோட்டையிலேயே ஓட்டை.. இந்த அவமானம் உனக்கு தேவையா? EPS- ஐ பந்தாடிய அமைச்சர் சிவசங்கர்..!